பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை திறப்பதாயின் அது மூடியே இருக்கட்டும் என யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை வடக்கின் யாழ் பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனை அறுதியிட்டு கூறியுள்ளார மஹிந்த ஹத்துருசிங்க.
பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரியரத்னத்துடன் கூட்டத்தில் சமூகமளித்திருந்த ஒரு சில பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மற்றும் 4 மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர் பிரபாகரன் வருவார் மீண்டும் ஈழவிடுதலைப் போராட்டத்தை நடத்துவார் என்ற கனவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களான சொலமன் தர்ஸானந் ஆகியோர் மாணவர்களை வழிநடத்திய பிரிகேடியர்கள் எனவும், கூறியிருக்கின்றார்.
இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் மஹிந்த ஹத்துருசிங்கவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு 1983ன் பின்னான இலங்கையின் இனப்பிரச்சனை குறித்த குறுக்கு வெட்டு முகத்தை தெளிவுபடுத்திய போதும் அவற்றை கணக்கில் எடுக்காத அவர் காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்ட 4 மாணவரின் பெற்றோர்களையும் வெளியேற்றி புனர்வாழ்வுக்கு முன்னர் மாணவரின் விடுதலை என்ற பேச்சிற்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸவின் நேரடியான அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாக இராணுவத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு-
பல்கலைக்கழக மாணவர்களினது விடுதலையினை வலியுறுத்தி இன்று காலை 10மணிக்கு பலாலியில் நடைபெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்தச் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இப்போதும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வருவார் எனவும் அவர்களின் கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் இவர்கள் கனவு காண்கிறார்கள். அந்த கனவு கலைக்கப்படும் வரையில் அவர்கள் விடுதலை செய்யப்படப் போவதில்லை.
நாம் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்தபோது பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளிருந்து சுமார் 50ற்கும் மேற்பட்ட பிரபாகரனின் புகைப்படங்களை மீட்டிருக்கின்றோம். இதன் மூலம் இவர்கள் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை தற்போதும் முன்னெடுக்கிறார்கள் என்பது நிருபிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் புலம்பெயர் நாடுகளிலுள்ள நெடியவன், விநாயகம் போன்ற பயங்கரவாதிகளுடன் இவர்களுக்கு நேரடியான தொடர்புகள் இருப்பதை நாம் உறுதி செய்திருக்கின்றோம்.
இதிலும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்த்தின் செயலாளரான தர்சானந்த் மற்றும் சொலமன் ஆகியோர் புலிகள் அமைப்பின் பிரிகேடியர் தரத்திலானவர்கள்.
ஜே.வி.பியின் போராட்டத்திற்கும், புலிகளின் போராட்டத்திற்கும் நிறையவே வித்தியாசமுள்ளது. புலிகள் தனிநாடு கோரி போராடினார்கள். அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். உலகமே புலிகளை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தியிருக்கின்றது.
எனவே நாம் இதற்கு அனுமதிக்க மாட்டோம். என கூறியதுடன், விரிவுரையாளர்களும், பெற்றோரும் தமது பிள்ளைகள் தொடர்பில் பேச முற்பட்டபோது அவர்களை வாயை மூடுங்கள் என அடக்கியுள்ளார்.
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கண்ணீர் விட்டழுது தங்கள் பிள்ளைகளை விடுவியுங்கள் என கேட்டபோது கிட்லர் பாணியில் சிரித்தபடியே எழுந்து சென்றுவிட்டார்
இதேவேளை வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவம் இருப்பதாக சிலர் கூறுகின்றார்கள். ஆனால் 15ஆயிரம் இராணுவமே இருப்பதாகவும் இராணுவத்தளபதி கூறியுள்ளார்.