புதிய கிளர்ச்சி இயக்கங்கள் உருவாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது – சந்திரிக்கா

இலங்கையில் புதிய கிளர்ச்சி இயக்கங்கள் உருவாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த அடக்குமுறைகள் தொடர்ந்தும் நீடித்தால் நாட்டில் புதிய கிளர்ச்சி இயக்கங்கள் உருவாகுவதனை தவிர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நைஜீரிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் யுத்த அணுகுமுறை சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடாத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு போதியளவு உரிமைகள் வழங்கப்படவில்லை எனவும், தமது ஆட்சி காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முனைப்பு காட்டியதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பான முனைப்புக்களுக்கு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பை வெளியிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதியின் குடும்பத்தினர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும், 200க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் முக்கயி அரச பதவிகளை வகித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.