செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான அறிகுறி கண்டுபிடிப்பு

செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டும் தாதுக்கள் அங்கு காணப்படுவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

 லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் மற்றும் அபெர்டீன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் ஜியோசயன்ஸ் அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கிரகங்களை விண்கற்கள் மோதும்போது, நிலப்பரப்புக்கு அடியில் இருக்கின்ற பாறைகள் மேற்பரப்புக்கு கொண்டுவரப்படுகின்றன.

செவ்வாய்க் கிரகத்தில் அவ்வாறு விண்கல் மோதி ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் காணப்படும் பாறைகளில் உள்ள தாதுக்களை ஆராயும்போது அங்கே உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்று இன்னும் தெரியாத நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் நிலத்துக்குள்ளே நுண்ணியிர்கள் வாழ்ந்தது உறுதிசெய்யப்படுமானால் அது பூமியில் உயிர்கள் தோன்றிய விதத்தை புரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான டாக்டர் ஜோசஃப் மிச்சால்ஸ்கி கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published.