அம்பாறை, ஒலுவில் கடல் பிரதேசத்தில் நேற்று தத்தளித்துக்கொண்டிருந்த பங்களதேஷ், மியான்மார் நாடுகளைச்சேர்ந்த 138 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
எனினும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் பங்களதேஷில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த குழுவினர், ஒலுவில் கடலில் 70 மைல்களுக்கப்பால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோதே கடற்படையினரால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் எட்டுவயதுக்குட்பட்ட சிறுவர்கள் 8 பேரும் பெண்கள் 3 பேரும் உள்ளடங்குகின்றனர்.
உணவின்றி ஒருவர் இறந்துள்ளார். மேலும்,மயக்கமுற்ற நிலையில் 2 பெண்கள் உட்பட 6 பேரை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் நான்கு நாட்களாக உணவுகள் இன்றி நடுக்கடலில் இருந்திருப்பதாக கடற்படையினரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.