பொதுவாக காய்கறிகளும், பழங்களும், முட்டை, மீன், கறி வகைகளும் உடலுக்கு நன்மை பயக்கும் வகையில் தான் உள்ளன. அவற்றை சரியான அளவில், அதற்கேற்றவாறு சமைத்து சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.
அந்த வகையில், உடலுக்கு நன்மை அளிக்கும் முக்கியமான 10 உணவுகளை இங்கே பட்டியலிடுகிறோம்.
ரைத்தா…
ரைத்தா என்றதுமே.. என்ன ரைத்தாவா.. இதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் இதில் நிறைய இருக்கிறது. தயிரில் வெங்காயம் அல்லது வெள்ளரி அல்லது தக்காளி மற்றும் காய்கறிகளை சேர்த்து ரைத்தா செய்யலாம். இதன் மூலம் ரைத்தாவில் சேர்க்கப்படும் தயிர் முதல் காய்கறி, பழம் வரையிலான அனைத்துப் பொருட்களின் சத்துக்களும் எந்த விதத்திலும் வீணாகாமல் உடலுக்குக் கிடைக்கிறது.
மோர்
உடல் சூட்டைத் தணிக்கவும், உடலுக்குத் தேவையான சக்தியை உடனடியாக அளிக்கவும் மோர் பயன்படுகிறது. அவ்வாறான மோரில் குறைந்த கொழுப்புச் சத்து இருப்பது மேலும் நன்மை அளிக்கிறது.
பருப்பு
பருப்பு வகைகளில் ஏராளமான புரதச் சத்து உள்ளது. இவை உடலுக்குத் தேவையான புரதத்தை அளிக்கின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பருப்பு வகைகளை உண்ணலாம்.
தந்தூரி சிக்கன்
தயிர் மற்றும் மசாலா கலந்து நன்கு ஊறவைத்து தீயில் வெந்த தந்தூரி சிக்கன் உடலுக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கும். இதில் அதிகப்படியான எண்ணெய் இல்லாததால் தேவையற்ற கொழுப்பு சேர்வதில்லை.
ராஜ்மா
வட இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவு ராஜ்மா. தற்போது நம்மூர்களிலும் அதிகம் விற்பனையாகிறது. இது குழந்தைகளுக்கு பிடித்த உணவாக உள்ளது. இதில் அதிகமான புரதச் சத்து உள்ளது.
அத்திப்பழம்
பழச்சாறு என்றாலே நாம் பொதுவாக ஆப்பிள், ஆரஞ்சு பழங்களையே நாடுவோம். ஆனால் ஒரு முறை அத்திப்பழ சாறு பருகிப் பாருங்கள். இதில் வயிற்றுக்கு நன்மை பயக்கும் நிறைய விஷயங்கள் உள்ளன.
மூக்கடலை
மூக்கடலையில் இரண்டு வகை உள்ளது. இரண்டிலுமே நிறைய சத்துக்கள் உள்ளன. இதனை வேக வைத்து குழந்தைகளுக்கு அளிக்லாம். மேலும், முதல் நாள் இரவில் ஊற வைத்து, மறுநாள் தண்ணீரை வடித்துவிட்டு பகல் பொழுதில் எடுத்து பார்த்தால் முளை விட்டிருக்கும். இதனை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு பலத்தை அளிக்கும்.
காராமணி
முந்தைய காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த காராமணி தற்போது பல வீடுகளில் பயன்படுத்தப்படுவதே இல்லை. முந்தைய நாள் இரவில் ஊறவைத்து மறுநாள் வேகவைத்து சமையலில் பயன்படுத்த வேண்டும். இது குழந்தைகளுக்குத் தேவையான உடல் பலத்தை அளிக்கும்.
கீரைகள்
கீரைகள் என்றதும் அதைப் பற்றி சொல்லவேத் தேவையில்லை. ஒவ்வொரு வகை கீரையிலும் பல சத்துக்கள் உள்ளன. வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது கீரை சேர்த்துக் கொண்டால் நோய் நம்மை அண்டாது.
மீன் வகை
மீன்களில் காணப்படும் பல்வேறு விஷயங்கள் உடலுக்கு நன்மை அளிப்பதாக உள்ளன. அசைவ பிரியர்கள் அவ்வப்போது மீன்களை உண்பது நல்லது.