கடலோர மாவட்டங்களில் தொடங்கியது மீன்பிடித் தடைக்காலம் – 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29 ஆம் தேதி வரையிலான 45 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக அறியப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலமானது, 45 நாட்களில் இருந்து 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள தடைக்காலத்தால், சென்னை முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு அனுமதியில்லை. எட்டாயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தடைக்காலத்தில் மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனிடையே, மீன்வளத்துறை ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், மீன்பிடித் தடைக்காலம் இரண்டு மாதங்கள் அமலில் இருக்கும் என்று தெரிவித்தார். ஒரு லட்சத்து 60 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு 82 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்தத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
செய்தி-2
நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மீன்பிடித் தடைக்காலம் – நிவாரணத்தொகையை உரியகாலத்தில் கொடுக்க மீனவர்கள் கோரிக்கை
கடந்த காலங்களில் 45 நாட்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம், 61 நாட்கள் என அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், மீனவர்களின் கோரிக்கையும் அதிகரித்திருக்கின்றன.
சென்னை முதல் குமரி கடற்பகுதி வரை, அமல்படுத்தப்பட்டிருக்கும் மீன்பிடி தடைக்காலம் மீன்களின் இனவிருத்திக்கு ஏற்ற காலமாக ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த 61 நாட்களிலும், வலைகளை உலர்த்துவது, படகுகளை சீரமைப்பது என தங்களை அடுத்த பயணத்திற்கு தயார்செய்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளும் மீனவர்களின் கோரிக்கைகளெல்லாம், தடைகாலத்தில் அரசின் சார்பில் தங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகையை அதிகரித்து உரியகாலத்தில் வழங்க வேண்டும் என்பதுதான்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் மட்டும் 10 ஆயிரம் மீனவர்கள், 60 ஆயிரம் சார்பு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.