தாக்குதலில் அலுவலகம் சேதமடைந்திருப்பதுடன் பத்திரிகை விநியோகப் பணிக்காகச் சென்ற இரு பணியாளர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
வழமைபோன்று பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபடும் வாகனத்தில் பத்திரிகைகளை எடுத்துச் சென்று யாழ் – கண்டி நெடுஞ்சாலை, கரடிப்போக்குச் சந்தியி்ல் அமைந்துள்ள உதயன் அலுவலகத்தில் பத்திரிகைகளை இறக்குவதற்கு ஆயத்தமானபோது அலுவலகத்தில் அயலில் உள்ள ஆட்களற்ற கட்டடங்களினுள்ளும், பற்றைகளுக்குள்ளும் மறைந்திருந்து வெளிப்பட்ட காடையர்கள் வாகனத்தில் வந்த பணியாளர்களைக் கொட்டன்களினால் தாக்கிக் காயப்படுத்தியதோடு, அலுவலகத்தினுள்ளே புகுந்து அடித்து நொருக்கியிருக்கின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு பணியாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அலுவலகம் முற்றாகச் சேதமடைந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அண்மைக்காலமாக பத்திரிகைகள் மக்களின் கைக்குச் செல்வதைத் தடுப்பதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் திட்டமிட்ட முறையில் விநியோகப் பணிகளைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, பத்திரிகை விற்பனையாளர்களும் கடும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்!- பா.உ சரவணபவன், சி.சிறீதரன் ஆகியோர் நேரில் சென்று பார்வை
கிளிநொச்சி உதயன் பணிமனை மீதும் பணியாளர்கள் மீதும் காட்டு மிராண்டிகளின் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மூன்று பேர் படுகாயம் உட்பட நான்குக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறீதரன் ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிசாரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காயப்பட்டுள்ளவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி அலுவலகம் மீது தாக்குதல் இடம் பெற்று ஐந்தாவது நாள் அதிகாலை ஏழு பேர் கொண்ட குழுவினரால் முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு அலுவலகத்துள் புகுந்து மோசமான முறையில் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.
இத்தாக்குதல்களால் கிளிநொச்சி பகுதி மக்கள் மத்தியிலும் அச்சமும், பதட்டமும் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
தாக்குதல்கள் தொடருகின்ற போதிலும் தாக்குதலாளிகள் எவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது தாக்குதலாளிகளுக்கு துணிவை ஏற்படுத்துவதாக அமைகின்றது.