செய்திகள்

அணு உலை எதிர்பாளர்கள் மீது நடந்த தாக்குதல் பேச்சுவார்த்தையை நிறுத்த நடந்த சதியே: நாம் தமிழர் கட்சி

கூடங்குளம் அணு உலை தொடர்பான அச்சத்தைப் போக்க மத்திய அரசு நியமித்த குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மீது நடந்துள்ள தாக்குதல், பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு, அணு உலையை இயங்கச் செய்வதற்காக நடத்தப்பட்ட சதியாகவே நாம் தமிழர் கட்சி கருதுகிறது.

பேச்சுவார்த்தைக்கு வந்த அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் வந்த கார் மீது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டடிருந்த இந்து முன்னணியினரும், அவர்களோடு காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதுமான அளவிற்கு காவல் துறையினர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இப்படிப்பட்ட தாக்குதலை நடத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், இந்து முன்னணியினர் போராட்டக் குழுவினர் வந்த காரின் மீது ஆவேசமாக பாய்ந்து தாக்கியதும், பின்னால் வந்து அவர்களை அடிப்பதும் பல தொலைக்காட்சிகளில் தெளிவாக காட்டப்பட்டது. அப்படியானால் அங்கிருந்த காவல் துறையினர் ஏன் தடுத்து நிறுத்தவில்லை?

மத்திய அரசு நியமித்த குழுவினருடன் போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த வருகின்றனர் என்பது தெரிந்தும், இந்து முன்னணியினரின் ஆதரவு போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி அளித்தது ஏன்? தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் போராட்டக் குழுவினர் வெளியேறியது நியாயமானதே. ஆனால், அதையே காரணமாக்கி இதற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று மத்தியக் குழு முடிவெடுத்திருப்பது ஆச்சரிமளிப்பது மட்டுமின்றி, பேச்சுவார்த்தையை தொடர மத்திய அரசு விருப்பப்படவில்லை என்பதையும், மக்களின் அச்சத்தைப் போக்காமலேயே அணு உலையை இயக்க முடிவெடுத்துவிட்டதையுமே காட்டுகிறது.

இது மக்களை ஏமாற்றும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். தங்களுடைய வாழ்விற்கும், எதிர்காலத்திற்கும், வாழ்வாதாரங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாகிவிடும் என்பதற்காகவே கூடங்குளம் பகுதி மக்கள் இப்போராட்டத்தில் குதித்தனர். ஆனால் அவர்களின் அச்சங்களை போக்கத் தவறிவிட்டதன் மூலம் அது மக்கள் நலனை விட அணு உலைகளை வாங்கி நிறுவும் தனது திட்டத்திற்குத்தான் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது என்பது வெளிப்படையாகிவிட்டது. இதுவே அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் நோக்கத்தை நியாயப்படுத்துவதாக ஆகிவிட்டது.

அரசுகளின் எந்த ஒரு திட்டமானாலும் அது மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர, மக்கள் நலனையும் பாதுகாப்பையும் புறக்கணிப்பதாக இருக்குமானால், அதனை எதிர்த்துப் போராட வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் முதன்மைக் கடமையாகிறது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *