திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் விஐபி பக்தர்கள் இன்று முதல் சம்பிரதாய உடை அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. விஐபி பக்தர்கள் அதிக நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் அவர்களுக்கு பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அவர்களுக்கு உடை கட்டுப்பாடு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி விஐபி தரிசனத்திற்கு வரும் பெண்கள் புடவை, ஜாக்கெட்; பாவாடை, தாவணி; துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் பஞ்சாபி ஆடைகள் ஆகியவற்றை மட்டுமே அணிந்துவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அங்கு வரும் ஆண் விஐபிக்கள் வெள்ளை பஞ்சகட்சம், மேல் துண்டு; வெள்ளை வேஷ்டி, சட்டை; வெள்ளை குர்தா, பைஜாமா ஆகிய உடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பிரதாய உடைகளை அணிந்து வருபவர்கள் மட்டுமே விஐபி தரிசனத்தில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த விதிமுறை இன்று முதல் அமல் செய்யப்படுவதாக திருப்பதி கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.