அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர்.
ஓக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்நகரமே சின்னாபின்னாமாகி விட்டது. ஏராளமான வீடுகள், பள்ளிகள் முற்றிலும் சேதமடைந்தன.
இச்சூறாவளியால் 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 70 குழந்தைகள் உள்பட காயமடைந்த 233 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓக்லஹோமா நகரில் அவசர நிலையை பிறப்பித்து ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அங்கு மீட்புப் படைகளை அனுப்பி வைத்துள்ளார். நிலப்பகுதியில் 40 நிமிடங்கள் தங்கி வீசிய சூறாவளியால் 2 ஆரம்பப் பள்ளிகளில் இருந்த குழந்தைகள் உயிருடன் தூக்கி எறியப்பட்டனர்.
மீட்புப் படையினர் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடி வருகின்றனர். சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தங்கள் குழந்தைகளின் கதி என்ன ஆனது என தேடி வரும் பெற்றோரைப் பார்த்தால் இதயம் நொறுங்கி விட்டது என ஓக்லஹோமா ஆளுநர் மேரி பாலின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேபகுதியில் கடந்த 1999ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளிக்கு 36 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.