லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர் கைது

லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஊல்விச் இராணுவ முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று பிசியான லண்டன் சாலையில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

கொலையாளியை பொதுமக்களே மடக்கி பிடித்தனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு பெண் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் மைக்கேல் எடிபோலஜா(28) என்று தெரிய வந்துள்ளது.

பிரிட்டன் இராணுவத்தினரால் முஸ்லிம் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதற்குப் பழிவாங்கவே இத்தாக்குதலை நடத்தினேன் என்று தாக்குதலுக்குப்பின் எடிபோலஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதுகாப்பு நிலை குறித்து ஆராய அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த டேவிட் கமரூன் கூறுகையில், பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை அனுமதிக்க முடியாது.

புதன்கிழமை நடைபெற்ற தாக்குதல் பிரிட்டன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்; இஸ்லாம் மதத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம். இத்தாக்குதல் பிரிட்டன் மக்களை மிகவும் பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *