ரஷ்ய ஜனாதிபதியும் அவரது மனைவியும் விவாகரத்து: அரச தொலைக்காட்சியில் அறிவிப்பு

ரஷ்ய ஜனாதிபதியும் அவரது மனைவியும் விவாகரத்து: அரச தொலைக்காட்சியில் அறிவிப்பு

30 வருட திருமண வாழ்க்கைக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், அவரது மனைவி லியுத்மிலாவும், நேற்று தங்களது விவாகரத்து பற்றி அறிவித்தனர்.

கிரெம்ளின் மாளிகையில் நடைபெற்ற பாலே நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று வந்தபின், இந்த அறிவிப்பை அதிபர் புதின் வெளியிட்டார். இது தாங்கள் இருவரும் இணைந்து எடுத்த முடிவு என்றும் அவர் கூறினார்.

1983ம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு, மரியா, யேகடெரினா என்ற இரண்டு மகள்கள் உண்டு. நீண்ட வருடங்களாக ரஷ்யாவின் அரசியலில் தலைமைப் பதவியில் இருக்கும் அதிபர் புதினுடன், அவரது மனைவி எந்த இடத்திலும் சேர்ந்து காணப்பட்டதில்லை. அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் புதினுடன், லியுத்மிலா எங்கும் சென்றதில்லை.

விமானப் பயணங்கள் தனக்கு சிரமத்தைத் தரக்கூடியவை என்று கூறிய அவர், அரசியல் விளம்பரங்களும் தனக்குப் பிடிப்பதில்லை என்றும் கூறினார். தாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதே இல்லை என்று குறிப்பிட்ட புதின், அவரவர் வாழ்க்ககையை வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இருவரும் நெருக்கமானவர்களாகவே இருப்போம், அவர் எனக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றி என்று அவரது மனைவி லியுத்மிலா கூறினார்.

நிகழ்ச்சியின் போது அதிபர் புதின் ஒதுங்கியிருந்தது போன்று இருந்தார். மனைவி லியுத்மிலாவோ ஒப்புக்கு சிரிப்பது போல் தோன்றினார். மற்ற மேற்கத்திய நாடுகளைப் போல் இல்லாமல், ரஷ்யத் தலைவர்களின் துணைவிகள் பொதுவாக அரசியல் பொது வாழ்க்கையில் இணைந்து தோன்றமாட்டார்கள். பழமைவாத நாடாக இருந்த போதிலும், அங்கும் விவாகரத்துகள் சகஜமான ஒன்றாகத்தான் இருக்கின்றன.

யுனிசெப் கணக்கெடுப்பின்படி, கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் 7,00,000 ரஷ்யர்கள் தங்கள் மணவாழ்வினை ரத்து செய்துள்ளனர். ஆனால், அரசியல் தலைவரான புதினின் விவாகரத்தை, பொதுமக்கள் நோக்கும் விதம் குறித்து இன்னும் கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published.