வட கொரியா- தென் கொரியா இடையில் சுமூக முடிவு எட்டப்படுமா?

வட கொரியா- தென் கொரியா இடையில் சுமூக முடிவு எட்டப்படுமா?

பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு வடகொரியா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டது தென்கொரியா.

கடந்த பிப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுதச்சோதனை நடத்தியதை அடுத்து இரு நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டது.

அமெரிக்காவும், தென்கொரியாவும் தொடர்ந்து போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன. வடகொரியாவும் அவ்வப்போது தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டியது.

இந்நிலையில் வடகொரியாவில் செயல்படும் கொரியா ஒருங்கிணைப்பு குழு வெளியிட்ட அறிக்கையில், கூட்டுத் தொழிற்மண்டலத்தை மீண்டும் திறப்பது உள்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தென்கொரியாவுக்கு வசதியான நேரம், நாளில் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

கேசாங் கூட்டுத் தொழில்மண்டலத்தை திறப்பது, இரு நாடுகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் வருகை, மேலும் பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்ப்பது தொடர்பாக முதலில் பேச்சு நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. தென்கொரியா இதற்கு உடன்பட்டால், ஏற்கெனவே முடக்கப்பட்ட ஹாட்லைன் சேவை மீண்டும் தொடங்கப்படும்.

இருதரப்புக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்த தென் கொரிய அதிகாரிகள் விரும்பினால் அவர்கள் இந்த நல்வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேசாங் கூட்டுத் தொழில்மண்டலத்தை மீண்டும் திறப்பது தொடர்பாக வடகொரியாவுடன், பேச்சு நடத்த தென்கொரியா ஒப்புக் கொண்டது.

மேலும் தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கிம் யூங் சக் கூறுகையில், கடந்த சில மாதங்களாக நிலவிய பதற்றத்துக்கு பின் முதன்முறையாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நம்பிக்கையை ஏற்படுத்தும். பேச்சுவார்த்தைக்கான நாள், நேரம் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.