தெரிவுக்குழு குறித்து விரைவில் முடிவு: த.தே.கூட்டமைப்பு – தெரிவுக்குழுவில் இடமில்லை: முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி

இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசு நியமித்திருக்கும் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் தெரிவித்தார்.

இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் 19 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை இலங்கை அரசு வெள்ளியன்று அறிவித்திருக்கிறது.

இந்த தெரிவுக்குழுவில் சேரும்படி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அழைப்பு வந்ததாகவும், ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவினர் இந்தியா செல்வதற்கு முன்பாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த சம்பந்தர், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் இது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறினார்.

வெளிநாட்டில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அனைவரும் இலங்கை திரும்பிய பிறகு, எல்லோரும் கலந்துபேசி இந்த தெரிவுக்குழு தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை தாங்கள் எடுக்கவிருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

இந்திய பயணத்தின் போது இலங்கை அரசின் இந்த தெரிவுக்குழு குறித்து இந்திய அரசிடம் தாங்கள் முக்கியத்துவம் கொடுத்து பேசவில்லை என்று கூறிய சம்பந்தர், பதின்மூன்றாவது சட்டத்திருத்தம் தொடர்பாகவே இந்திய பிரதமர் உள்ளிட்ட இந்திய தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரிவாக பேசியதாகவும் தமிழோசையிடம் கூறினார்.

தெரிவுக்குழுவில் இடமில்லை: முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி

இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை திருத்துவது குறித்து ஆராய இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சிறுபான்மைக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படாதது குறித்து அந்தக் கட்சியினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

இது குறித்து கல்முனையில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முக்கிய சிறுபான்மைக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை புறக்கணித்து விட்டு இந்த நடைமுறைகளில் முஸ்லிம்களும் உரிய பங்களிப்பை பெற முடியாது என்று தமிழோசையிடம் தெரிவித்த அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான ஹசன் அலி அவர்கள்,

சில வேளைகளில் அடுத்த கட்டமாக இலங்கை அரசாங்கத்தினால் உறுப்பினர்கள் அறிவிக்கப்படும் போது அதில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடமளிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், 13வது திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்காக இந்த தெரிவுக்குழு அறிவிக்கப்பட்டதாக ஒரு புறம் கூறப்பட்டாலும், அது இனப்பிரச்சினை தீர்வுக்கானது என்று மறுபுறம் கூறப்படுவதால், அந்த தெரிவுக்குழு அமைக்கப்படுவதற்கான நோக்கம் குறித்து குழப்பம் நிலவுவதாகவும் ஹசன் அலி குறிப்பிட்டார்.

அதேவேளை 13வது திருத்தச்சட்டத்தில் உள்ளவற்றை குறைப்பதற்கான நோக்கில் அந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதனை தமது அமைப்பு கடுமையாக எதிர்க்கும் என்றும் ஹசன் அலி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.