அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத் தமிழருக்கு என்ன பயன்?

‘ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழுக் கூட்டத்​தில், அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்’ என்று தி.மு.க. உள்பட அனைத்து தமிழகக் கட்சிகளும் போர்க்குரல் எழுப்புகின்றன. அதே சமயம், ‘இந்தத் தீர்மானம் தமிழர்​களுக்கான நீதியைப் பெற்றுத் தராது’ என்று ஈழத் தமிழர் ஆதரவு தமிழின அமைப்புகள் மாறுபட்ட குரலை எழுப்புகின்றன.

 

இதுபற்றி ‘மே 17’ இயக்கத்​தின் ஒருங்கிணைப்பாளர் திரு​முருகனிடம் பேசினோம். ”ஈழத் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக அழித்த ஈழப்போர் பற்றி, 2010 ஜனவரியில் அயர்லாந்து நாட்டின் டஃப்லின்  தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. இறுதியில், ‘ஈழப் போரில் இலங்கை அரசாங்கம், போர்க்குற்றங்களிலும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டது’ என்று சர்வதேச நீதித்துறை வல்லுநர்கள் தீர்ப்பு அளித்தனர்.

 

அதோடு, ‘புலிகள் மீது தடை விதித்ததன் மூலம் அமைதி முயற்சியை சர்வதேச சமூகம் சீர்குலைத்து விட்டது’ என்றும் குறிப்பிட்டு இருந்தனர். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர் அமைப்புகளும் டஃப்ளின் தீர்ப்பாயத்தின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தின. அதுவரை இந்த விவகாரத்தில் ஐ.நா. அமைதியாக இருந்தது.

பிறகு, ஐ.நா-வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை விவகாரம் தொடர்பாக ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார். தரூஸ்மன் தலைமையிலான அந்த வல்லுநர்குழுவோ, போருக்கான காரணங்​களை தன் விசாரணை வரம்புக்குள் எடுத்துக்கொள்ளவே இல்லை.

 

போர் சம்பவத்தை மட்டுமே மையமாக வைத்து விசாரணையை நடத்தி முடித்தது. எனவே, தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதால்தான், ஈழத்தில் விடுதலைப்போர் நடந்தது என்ற அடிப்படை அம்சமே அதில் விடுபட்டுப் போனது. அதனால், இரு தரப்புமே போர்க்குற்றம் செய்தார்கள் என்று சமமாகப் பாவித்து அறிக்கையை வெளியிட்டது. இனப் படுகொலை என்பதையே பதிவுசெய்யாமல் விட்டுவிட்டார்கள்.

 

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவின் தீர்மானம் வருகிறது. ‘அமைதி முயற்சி என்ற பெயரில் தமிழர் தரப்பின் போர் வலிமையையும், போராளிகளின் நிதி வலிமையையும் பலம் இழக்கச் செய்ததில் அமெரிக்க அரசுக்கும் பெரும்பங்கு இருந்து ள்ளது’ என்று,  இலங்கையில் பணியாற்றிய ராபர்ட் ஃப்ளேக் (தெற்காசிய பகுதிக்கான செயலர்) வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.

 

அமெரிக்காவின் ராடார் இலங்கையின் வடபகுதியில் புலிகளைக் கண்காணிக்க நிறுவப்பட்டது. இந்தியா, சீனாவின் ஆயுதங்கள் மற்றும் அமெரிக்க ராடார்கள் புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்காவின் ராணுவக் கால்பதிப்பு ஒப்பந்தம், மன்மோகன் அரசின் சிறு எதிர்ப்பும் இல்லாமல் 2007 மார்ச் 5-ம் தேதி, நடந்து முடிந்தது. அதே கூட்டணிதான், இப்போது மீண்டும் கைகோத்துள்ளது. தான் ஒரு ஒரு ஜனநாயக நாடு என்பதை நிறுவுவதற்காக, அமெரிக்கா இப்போது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

 

இலங்கையில் முழுமையாகக் காலூன்ற விரும்பும் அமெரிக்கா, போர்க்குற்ற விசா ரணையின் மூலம் ராஜபக்ஷே அரசைத் தூக்கி எறிந்துவிட்டு, ரணில் அல்லது வேறு யாரோ ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமரவைத்து, தன் சொல்பேச்சைக் கேட்கும் பொம்மை அரசை உருவாக்க விரும்புகிறது.

 

இதில், தமிழர்களின் நலன் பற்றிய பேச் சுக்கள் இல்லை என்பதுதான் கவலை. தனக்கு ஆதரவாக நின்ற அதிபர்களையே மாற்றி, ஆட்சிகளைக் கவிழ்க்கும் அமெரிக்க அரசு, தான் சந்தேகப்படும் ராஜபக்ஷே போன்ற நபரை எப்படி விட்டுவைக்கும்?

 

‘இனப் படுகொலைக் குற்றத்தை சர்வதேச விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும்’ என்ற டஃப்ளின் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மேன்மேலும் முன்கொண்டு செல்வதுதான், தமிழர்களின் கடமையாக இருக்க முடியும்” என்கிறார் திருமுருகன்.

கனம் பொருந்திய வார்த்தைகள்!

– இரா. தமிழ்க்கனல்

படம்: பொன்.காசிராஜன்

நன்றி : ஜூனியர் விகடன்

Leave a Reply

Your email address will not be published.