விடுதலைப் புலிகளின் கல்லறைகளை புதுப்பிப்பவர்கள் கைது செய்யப்படுவர்! கோத்தபாய எச்சரிக்கை

விடுதலைப் புலிகளின் கல்லறைகளை புதுப்பிப்பவர்கள் கைது செய்யப்படுவர்! கோத்தபாய எச்சரிக்கை
போரின் போது மரணமான விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் கல்லறைகளை அமைக்க யாரும் முயற்சித்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

யாழ். சாவகச்சேரி பிரதேசசபையில் அண்மையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி, போரில் இறந்த பொதுமக்கள் மற்றும் மாவீரர்களின் கல்லறைகள் புனரமைக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்தக் கோரிக்கையை வடமாகாண சபைக்கு அனுப்புவதற்கும் அங்கு முடிவெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் அவ்வாறு கோருபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று கோத்தபாய எச்சரித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும்.

எனவே யாரும் இறந்துப்போன விடுதலைப் புலிகளுக்கு கல்லறைகளை அமைக்குமாறு கோரமுடியாது என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

கல்லறைகளை அமைப்பதற்காக மயானங்கள் என்ற அடிப்படையில் பிரத்தியேக இடங்கள் உள்ளன.

இதனைத்தவிர வேறு புதிய இடங்களில் கல்லறைகளை அமைக்க முடியாது என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கின் ஆளுநர் சந்திரசிறியை பதவியில் இருந்து நீக்கும் கோரிக்கை இன்னும் எழுத்து மூலம் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று கோத்தபாய கூறினார்.

ஆளுநர் ஒருவரை நியமிப்பதும் நீக்குவதும் 13வது அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று கோத்தபாய சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில் ஆளுநர் பதவியில் சந்திரசிறியை நீக்குமாறு வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஆளுநர் சந்தரசிறியை ஆங்கில ஊடகம் ஒன்று வினவியது.

அதற்கு பதிலளித்த சந்திரசிறி, இதை பற்றி தனக்கு தெரியாது. எனவே எனது தொடர்பான விடயங்களை நீங்கள் மறந்து விடுவது உங்களுக்கு நல்லது என்று எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.