வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் மக்களையும் இராணுவப் புலனாய்வாளர்கள் அடிக்கடி விசாரித்து குடும்பவிபரங்களை சேகரித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்,

வடக்கில் குறிப்பாக யாழ்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மீளக்குடியேற்றப்பட்டுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் மக்களையும் இராணுவப் புலனாய்வாளர்களும் இராணுவத்தில் உயர்நிலையில் உள்ள அதிகாரிகளும் அடிக்கடி விசாரித்தும் குடும்பவிபரங்களை சேகரித்தும் வருகின்றனர்.

குறிப்பாக இவர்கள் இரவுவேளைகளிலேயே வீடுகளுக்குச் சென்று விபரங்களை சேகரிப்பதுடன் முன்னாள் போராளிகளை மிகவும் மோசமாக அச்சுறுத்துவதுடன் ஏன் இங்கு இருக்கின்றீர்கள்?, இங்கு இருக்காது வேறுநாடுகளுக்குச் செல்லுமாறும் அச்சுறுத்துகின்றனர்.

இவ்வாறான காரணங்களினாலேயே அநேகமானவர்கள் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்வதாகவும் கூறினார்.

இந் நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களின் தனித்துவத்தையும் அவர்களை இப்பிரதேசங்களிலிருந்து அந்நியப்படுத்தி தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இன விகிதாசாரத்தைக் குறைப்பதுமே இவர்களின் நோக்கமாக உள்ளதெனக் குறிப்பிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *