நெடியகாடு அபிவிருத்திச் சபையினால் கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான காணிகொள்வனவு செய்யப்பட்டுள்ளது
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் கல்விகற்கும் பாலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் மற்றும் நவீன கற்றல், கற்பித்தல் முறைகளிற்கேற்ப செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் தற்போதைய கட்டடத்தில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது. (தற்போதைய கட்டடம் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் குத்தகை அடிப்படையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது) இதனைக் கருத்திற் கொண்டு பாலர் பாடசாலைக்கான புதிய கட்டடம் ஒன்றினை நிர்மானிக்கும் முகமாக நெடியகாடு அபிவிருத்திச்சபையின் நிதி மூலம் நான்கு பரப்புக் காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக் காணி நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வடமேற்கு மூலையில் பிரதான வீதியோரமாக அமைந்துள்ளது.
மேலும் இக்காணிக் கொள்வனவிற்னான முழுநிதிப்பங்களிப்பையும் (பதிவுக்கட்டணம் உட்பட) நெடியகாடு அபிவிருத்திச்சபையின் அங்கத்தவர்களான லண்டன், அவுஸ்ரேலியா, கனடா, சுவிஸ், ஜேர்மன், டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழும் நெடியகாடு சமூகத்தினரதும், நலன்விரும்பிகளினதும் சார்பில் நெடியகாடு அபிவிருத்திச் சபையினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொள்வனவு செய்யப்பட்ட காணிணின் உறுதி, வரைபடம் மற்றும் காணினின் புகைப்படங்கள் என்பன கீழே இணைக்கப்பட்டுள்ளது.























