பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலை கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் விடுதலைக்கு யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மாணவர்கள் புனர்வாழ்வின் பின்னரேயே விடுவிக்கப்படுவரென்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களின் விடுதலை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான குழுவினர் கலந்துக்கொண்டனர்.
வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழகத்தை சேர்ந்த நான்கு மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்களிடம் சில விடயங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு குறுகிய கால புனர்வாழ்வு அளிப்பதற்காகவே வெலிகந்த புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்