ஈழத் தமிழ் இளைஞர்கள் மீது பொய்வழக்குப் போட்டு சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்ற செயலாகும் – வைகோ
சிறீலங்கா அரசுக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்த மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்காகவே, பொய்யான காரணங்களைச் சொல்லி வருகிறது. அதற்கு தமிழக அரசும் உடந்தையாக செயல்பட்டு வருகிறது.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைத்தீவில் வேதனைகளைச் சுமந்து, தமிழகத்தில் ஆறுதலும் அன்பான அரவணைப்பும் தேடி வந்த, ஈழத் தமிழ் இளைஞர்கள் மீது பொய்வழக்குப் போட்டு, சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.
முக்கியமாக காவல்துறை கியூ பிரிவு ஈழத் தமிழ் இளைஞர்களை, விடுதலைப்புலிகள் என்று குற்றம்சாட்டி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வழக்குப் பதிந்து, அவர்களை சிறையில் அடைக்கிறது.
தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னர், சென்னை பல்லாவரம்-பொழிச்சலூர் அருகே இப்படி கைது செய்யப்பட்ட நான்கு ஈழத் தமிழர்களில் மகேஸ்வரன் என்ற இளைஞர் இடுப்புக்குக் கீழ் கால்கள் இயங்க முடியாத துன்பத்தில் இருப்பவர். காவல்துறை வழக்கம்போல, கைது செய்யப்பட்டவர்களை அச்சுறுத்தி, காவல்துறையினரே தயாரித்த வாக்குமூலத்தை, கைதானவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் என்று அறிவிக்கிறது. இந்த ஒப்புதல் வாக்கு மூலங்கள் சட்டப்படி செல்லுபடி ஆகாது.
சிறீலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக வீடு வாசல், சொந்த உறவுகள் அனைத்தையும் இழந்து, தமிழகத்துக்கு வருகின்ற ஈழத்தமிழர்களை இப்படிப் பொய் வழக்குப்போட்டு சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். கண்டனத்துக்கு உரியதாகும்.
எனவே கைது செய்யப்பட்ட மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, உதயதாஸ், சுரேஷ்குமார் ஆகிய நால்வரையும் தமிழக அரசு, மனிதநேயத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.