
பொலநறுவை பராக்கிரமபாகு சமூத்திரத்தில் 12 அடி வான்கதவு திறக்கப்பட்டமையால் அதனை அண்மிய பாதைகள் துண்டிக்கப்பட்டன.
இதனால் வாகரைப் பிரதேசத்தின் கதிரவெளி, புச்சாக்கேணி, அம்பந்தனாவெளி, பால்சேனை, வம்மிவட்டவான், புளியங்கண்டலடி, கண்டலடி, வாகரை மத்தி, தட்டுமுனை, ஊரியன்கட்டு, அழகாபுரி உட்பட்ட பல கிராமங்கள் நீரில் மூழ்கின.
இதனால் படகு மூலம் மிகுந்த ஆபத்தின் மத்தியில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது வாகரைப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீ.யோகேஸ்வரன் நேற்றையதினம் மரக்கறி உட்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், படுக்கை விரிப்பு, அத்தியாவசிய பொருட்களுடன் படகு மூலம் வெள்ளத்தின் பின் இரண்டாவது தடவையாக வாகரை பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு சென்று சகல கிராமங்களையும், இடைத்தங்கல் முகாம்களையும் பார்வையிட்டதுடன், மக்களுக்கு தேவையான அவசிய பொருட்கள், சிறுவர்களுக்கான உணவுப் பொருட்கள், சிறுவர்களுக்கான நுளம்பு வலைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் அவசிய பொருட்களை வழங்கி வைத்தார்.
இவருடன் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் எஸ்.வசந்தராஜா, அதன் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் செயலாளருமான சா.மதிசுதன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொருளாளர் ந.புவனசுந்தரம், பேரவையின் அனர்த்த சேவைக் குழுவினரகள், செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் விஜயம் செய்தனர்.
இரண்டாம் இணைப்பு:
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட அடைமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டு ஆக உயர்ந்துள்ள அதேவேளை, காணாமல் போனதாக கூறப்படும் இருவர் தொடர்பாக இதுவரை தகவல்கள் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகிறது.
இம்மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலே கூடுதலானோர் உயிரிழந்தும் காணாமல் போயும் உள்ளார்கள். மண்முனைப் பற்றுஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் ஒருவரும், கோறளைப் பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவில் – 2 பேர், ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் – 2 பேர், போரதீவுப் பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் ஒருவரும் என இம்மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலே இருவர் காணாமல் போயுள்ளார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் ஒருவரும் அம்பாறை மாவட்டம் திருக் கோவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இறுதியாக வெளியாகியுள்ள தகவல்களின் படி உயிரிழந்தும் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 பேர் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 12 பேரும் ஆகும். மாத்தளை மாவட்டத்திலே கூடுதலான உயிரிழப்புகளும் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் பார்வையிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் பாடசாலைகளிலும், பொதுக்கட்டிடங்களிலும் தங்கியுள்ளனர். இவ்வாறு பொதுமக்கள் தங்கியுள்ள மக்களை அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் பார்வையிட்டதுடன் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களுடன் இணைந்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே.விமலநாதன், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் அவர்களும் சென்றிருந்தனர்.