2) வரலாற்றில் வல்லிபுரம்
இலங்கையின் மனித நாகரிக வளர்ச்சியின் தொட்டிலாக வல்லிபுரம் இருந்துள்ளது. இங்கிருந்துதான் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு மனிதன் பரவலடைந்தான் என வரலாற்றாய்வாளர்கள் நிறுவுகின்றனர். அனுராதபுரம், பொலநறுவை போன்று தொல்லியல் சான்றுகளை பெறுவதற்கான பெரியளவான முயற்சிகள் இங்கு மேற்கொள்ளப்படாவிடினும் யாழ்ப்பாண குடாநாட்டில் கந்தரோடையை அடுத்து வல்லிபுரமே முதன்மையான தொல்லியல் புதையலாக உள்ளது. வல்லிபுரமும் அதனை சூழவுள்ள இடங்களான நாகர்கோவில், குடத்தனை, உடுத்துறை, இயற்றாலை, புலோலி, கட்டைவேலி, பருத்தித்துறை போன்ற இடங்களும் பல்வேறு தொல்லியல் சான்றுகளை தன்னகத்தே கொண்டுள்ள தமிழனின் தொன்மை வரலாற்று நிலமாகும்.
புராதன வல்லிபுரம் என்பது இன்றுள்ள வல்லிபுரமாழ்வார் கோவில் சூழலிலிருந்து இருமருங்கும் சுமார் இரண்டு அல்லது சற்று கூடிய மைல்கள் பரந்திருந்தது. இக் கோவிலுக்கு மேற்கே சற்று தொலைவில் வராத்துப்பளை ஈஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயமிருக்கும் வரை மேற்கே வல்லிபுரம் விரிந்திருந்தது என சமஸ்கிருத மற்றும் வரலாற்று அறிஞர் பேரா வி.சிவசாமி ( “வல்லிபுரம் -ஒரு தொல்லியல் களஞ்சியம்” வி.சிவசாமி(1975):சங்கமம் இதழ்,1(4),யாழ்ப்பாணம்,பக் 12-16 ) வரையறுக்கின்றார். இவ்விரு கோவில்களிலிருந்து பிற்பட்ட காலத்தில் கடல் பின்வாங்கி சென்றுள்ளதை அப்பிரதேசத்தில் காணக்கிடைக்கும் எச்சங்களிலிருந்து விளங்கமுடியும். அதாவது கடல்கோள் அனர்த்தத்தினால் தமிழனின் தொன்மை கடலோர நகரமான வல்லிபுரம் கடல் கொண்டுபோய்விட பின்னர் கடல் சற்று வடிந்து பின்வாங்கி தற்போதைய இடத்தில் நிலைகொண்டிருக்கலாம் என துணியலாம். ஆக கடல் தின்றது போக எஞ்சிய, கோவிலுக்கு நேராக இரு பக்கமும் பரந்து விரிந்து கிடக்கும் மணல் குன்றுகளும் பற்றைக் காடுகளும் நிறைந்த வரண்ட வெளியே வளமான தொன்மை வரலாற்று பெருமை மிக்க வல்லிபுரமாகும். இங்கு புதையுண்டிருக்கும் வரலாற்று சின்னங்களை அகழ்வாய்வதன் மூலம் தமிழனின் ஆதி சமூகம் பற்றிய தெளிவைப் பெறலாம்.
இதுவரை இங்கு அறியப்பட்டுள்ள புராதன சின்னங்களில் ஆதிகால, மத்தியகால மட்பாண்ட ஓடுகள், செங்கட்டித் துண்டுகள், கீச்சுக் கிட்டங்கள், கூரை ஓட்டுத் துண்டுகள், கிணறு, ஈமத் தாழி, புராதன புத்தர் சிலை, விநாயகர் சிலை, பொற்சாசனம், பல்வேறு காலகட்ட நாணயங்கள், கட்டட அழிவுகள், போன்றன முக்கியமானவையாகும்.
நாகரிகமடைந்த மனிதனின் இருப்பைக் காட்டும் புராதன சின்னங்களில் மட்பாண்டங்கள் முக்கியமானவை. செம்மையாக வனையப்பட்ட பல்வேறு கால மண் பாத்திரங்களின் துண்டுகள் இங்கு கிடைத்துள்ளன. இவை தடிப்பில் வேறுபட்டும் பளபளப்பாகவும் நேர்த்தியாகவும் உள்ளன. தற்போதும் இப்பிரதேசத்தில் இவ்வாறான எச்சங்களை நாம் காணமுடியும். நான் இந்த வரலாற்று நிலத்தில் சிறு வயதில் ஓடி விளையாடி அலைந்திருக்கிறேன். வராத்துப்பளை ஈஸ்வரி அம்மன் கோவிலுக்கு முன்னால் உள்ள பள்ளங்களில் மழைக் கால வெள்ளத்தில் நீராடியுள்ளேன். அவ்வாறே நாகர்கோவிலில் உள்ள நாகதம்பிரான் கோவிலுக்கு வடமேற்காக நாவல் காட்டினை அண்டிய பள்ள நிலத்திலும் மழை வெள்ளத்தில் நீந்தியுள்ளேன். அந்த இடத்தினை ” பாலங்கன் வெட்டை” ( தெளிந்த நீர் நிறையும் பள்ளமாக இருப்பதால் பால் பொங்கும் வெட்டை என்றனர் என கொள்ளலாம்) என்பர். இப் பகுதிகளில் நீர் அரித்துச்சென்ற தடங்களில் சிறு ஓட்டு துண்டுகளையும் பழைய “செல்லாக்” காசுகளையும் எந்தவித வரலாற்று விளிப்புமின்றி சேகரித்து விளையாடியிருக்கிறேன். செழிப்பாக வாழ்ந்து அழிந்து சிதையுண்டுபோன என் மூதாதைகளின் மடியிலே விளையாடியதை எண்ணி கவலைப்படுவதா பெருமை கொள்வதா?
2004 இல் இலங்கை, இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளை சுனாமி பேரலை தாக்கி பாரிய அழிவுகள் இடம்பெற்றமை அறிந்ததே. இந்த அழிவுகளையும் மீள் புனர்நிர்மாணங்களையும் பார்வையிடுவதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து பேரா பாலசுந்தரம்பிள்ளை அவர்களுடன் வடமராட்சி கடலோர பகுதிகளுக்கு சென்றுள்ளேன். இதன்போது வராத்துப்பளை ஈஸ்வரி அம்மன் கோவிலுக்கு கிழக்காகவும் கற்கோவளத்தை அடுத்தும் உள்ள புனித நகர் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ஆதிகால சுடுமண் கிணற்றினை பார்வையிட்டோம். முன்பள்ளி ஒன்றிற்கான கட்டட வேலையின்போது ஒரு மணல்திட்டினை அகற்றி குழிதோண்டிய போது இதனை கண்டுபிடித்துள்ளனர். அதனை யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுதுறை பேராசிரியர்களும் முதற்கட்ட மேலாய்வுக்கு உட்படுத்தியிருந்தனர். இந்த செம்மையாக வடிவமைக்கப்பட்டிருந்த கிணறு ஒரு முக்கியமான வரலாற்று தடயமாகும். இந்த பதிவினை எழுதுவதற்காக அக் கிணற்றினை ஒரு புகைப்படம் எடுப்பதற்கு சென்றோம். அந்த ஊரவர்கள் அங்கு கட்டப்பட்டிருந்த முன்பள்ளியின் ஒரு பகுதியைக் காட்டி ” அக் கிணற்றை தூற்றுவிட்டு மலசல கூடம் கட்டியுள்ளோம்” என்றனர். தனது வரலாற்றை தெரிந்து பேணாத நாங்கள் எவ்வாறு புதிய வரலாற்றை படைக்கமுடியும்.
வராத்துப்பளை ஈஸ்வரி அம்மன் கோவில் தொடர்பாக ஒரு ஐதீகம் உண்டு. அதாவது வராத்துப்பளையில் மிகவும் வறியவர்களாக இருந்த குறித்த ஒரு குடும்பம் இந்த கோவிலடியில் பெரியளவான ஒரு புதையலை எடுத்ததாகவும் பின்னரே அவர்கள் இந்தக் கோவிலை கல்லால் கட்டியதாகவும் அதனையடுத்து அவர்கள் “நகை அடகு கடை” வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் அவ்வூரவர்கள் கூறுவர். அவ்வாறே வல்லிபுரகோவிலுக்கு மேற்காக சிறிது தூரத்தில் உள்ள ஆனைவிழுந்தான் சுடலை பகுதியிலும் முன்னொரு காலம் சிலர் புதையல் எடுத்ததாகவும் அறியமுடிகிறது. இவற்றை கட்டுக் கதைகளாக வரலாற்றில் கடந்து போனாலும் இதற்கு பின்னால் எம் மூத்தையர்களின் புதையுண்டு போன செல்வமே அவை என்ற உண்மையும் எஞ்சி நிற்கிறது.
வராத்துப்பளை என்ற பூர்வீக வரலாறு கொண்ட ஊரும் வல்லிபுரத்தோடு இணைந்தே தொன்மைக் காலத்தில் இருந்துள்ளதை அறியமுடிகிறது. பருத்தித்துறை- மருதங்கேணி வீதிக்கு மேற்காக உள்ள தற்போதைய வராத்துப்பளை என்பது ஒரு சில நூற்றாண்டுகள் பழமைவாய்ந்ததே. ஆதிகாலத்தில் வராத்துப்பளை கிராமம், வல்லிபுரகோவிலுக்கு மேற்காகவும் வராத்துப்பளை முச்சந்திப்பிள்ளையார் கோவிலுக்கு கிழக்காகவும் உள்ள தற்போது பற்றைக் காடு மண்டிய பிரதேசத்திலேயே இருந்துள்ளது. இதனை பல வரலாற்றுச் சான்றுகளும் அம் மக்களின் வாழ்வியல் சான்றுகளும் தெளிவுபடுத்துகின்றன.
வல்லிபுரமாழ்வார் கோவிலின் தோற்றம்பற்றி ஸ்காந்த புராணத்தின் ஒரு சிறு பகுதியாகிய த௸ண கைலாச மகாத்மியம் எனும் வடமொழி நூலிலே ஶ்ரீ வல்லிபுர வைபவம் எனும் பகுதியில் ஶ்ரீ சூதமகா முனிவரால் கூறப்பட்டுள்ளது. இந்த புராண கதையின் படி, லவல்லி எனும் பெண் பிள்ளைப் பேறின்றி இருந்ததாகவும் அவள் பிருகு முனிவரிடம் ஆசிகேட்டதாகவும் அவரே அவளை நீ சிவனை நோக்கி கடும் தவம்செய்து உன் நாகதோசத்தினை தீர்ப்பாய் என்றதாகவும் அவளும் கடும்தபசிருந்து சிவனை கண்டதாகவும் அவர் ” வராத்துப்பளை எனும் ஊரில் பிறந்து லவல்லி எனும் பேரோடு சிறப்பாக வாழ்வாய். அதன்போது விஷ்ணு மச்ச (மீன்) வடிவில் வங்க கடலிலே தோன்றி உன் மடித் தலத்தில் வருவார். அதன்போது நீ நாக சாபம் நீங்கி புத்திரப்பேறு பெறுவாய்” என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த தெய்வீக மீன் லவல்லியின் மடியில் வந்ததும் அது சக்கரமானதாகவும் அவள் அதனை கற்வோவள பகுதியில் இருந்த வலைஞர்களின் உதவியோடு ஊருக்கு காவி வரும்போது அவர்கள் இளைப்பாறிய இடத்தில் சக்கரம் நிலையூன்றியதாகவும் அதுவே தற்போதைய வல்லிபுர கோவிலும் அதன் மூல மூர்த்தியான சக்கரமும் ஆகும் என மேலும் அந்த மகாத்மியம் கூறுகின்றது. இக் கதை இந்த கோவில் எழுந்த பின்னரே புனையப்பட்டிருக்கலாம். ஏனெனில் இந்நூல் மத்திய காலத்ததாகும். ஆனால் வல்லிபுரம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இருக்கின்றது.
இன்னும் வராத்துப்பளை மக்களுடைய காணி நிலங்களும் பிள்ளையார் கோவில், முத்துமாரி கோவில், வைரவர் கோவில், ஈஸ்வரி கோவில் போன்றன எல்லாம் வல்லிபுர கோவிலை அண்டிய மேற்கூறிய பகுதியிலேயே இன்றும் உள்ளன. இந்த ஆளரவமற்ற பகுதியில் தற்போதும் சிதைந்த கட்டடங்களையும், கிணறுகளையும் காணலாம். முச்சந்தி பிள்ளையார், ஈஸ்வரி அம்மன் கோவில்களில் ஏறத்தாள 60,70 வருடங்களுக்கு முன்னர்வரை பெரும்திருவிழாக்களும் இரவுநிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. ஆயினும் வரலாற்றின் ஆதியில் இடம்பெற்ற கடல்கோள், கொள்ளை நோய் போன்ற இயற்கை அனர்த்தங்களால் மக்கள் இந்த இடத்தினை கைவிட்டு சற்று உள் நோக்கிச் சென்றும் சிலர் குடத்தனை, நாகர்கோவில், குடாரப்பு, என கிழக்கு பகுதி நோக்கியும் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதை இவ்வூர் மக்களின் உறவுப் பரம்பலை கொண்டு அறியமுடிகிறது. இதனை மூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் பேராசான் தா. ஜெயவீரசிங்கம் போன்றோரும் ஆய்வுகள்மூலம் நிறுவுகின்றனர்.
வல்லிபுரத்திலே கிடைத்துள்ள மிக முக்கியமான புராதன சின்னங்களில் ஒன்றாக தொன்மை தமிழ் திராவிட நாகரிகத்தைச் சேர்ந்த ஈமத் தாழியாகும். இதனோடு கூடவே வேறுசில நினைவுச் சின்னங்களும் கிடைத்துள்ளன. தற்போதைய வல்லிபுர கோவிலுக்கு அருகில் மேற்கே உள்ள ஒரு நிலத்தினை வெட்டியபோது இவை வெளிப்பட்டுள்ளன. இத் தாழி புலோலியில் இருந்த திரு விசுவலிங்கம் தம்பதிகளின் வீட்டில் அப்போது இருந்ததாக பேரா. வி.சிவசாமி 1975இல் எழுதியுள்ளார். அதனை பேரா கா. இந்திரபாலா அவர்கள் 1972இல் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். ஈமத் தாழி என்பது கி.மு 10 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 5ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் நிலவிய திராவிட- தமிழ் நாகரிக சின்னங்களிலே முதன்மைபெறுகின்றது. இறந்தவர்களின் உடலை முழுமையாகவோ அல்லது எரித்த பின்னரான சாம்பலையோ எலும்புகளையோ பெரிய தாழிகளில் அவர்கள் பயன்படுத்திய அணிகலன்கள், கருவிகள் போன்றவற்றையும் நெல் போன்ற தானியங்களையும் இட்டு அடக்கம் செய்தனர். எனவே வல்லிபுர தாழியும் ஏறத்தாள 2000 வருடங்களுக்கு முன்னர் இப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்தமையை அறைகூவி நிற்கிறது எனலாம்.
# விமலேந்திரன் பாரதிதாஸ்
( வரலாற்றின் வழித் தடத்தில் இன்னும் நீள நடப்போம்….)



















