வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்து வருகிறது
திருகோணமலையிலிருந்து 480 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த 12 மணித்தியாலங்களில் தாழமுக்கம் சூறாவளியாக வலுபெற்று வடமேல் திசையில் யாழ். குடாநாட்டை அண்மித்து நகர்வதற்கான சாத்தியம் உள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள வானிலை முன்னறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை நள்ளிரவு அளவில் சூறாவளி தமிழகத்தை நோக்கி நகரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது,
இந்த தாழமுக்கத்தின் விளைவாக டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடற்பரப்பிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
மன்னாரில் இருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புக்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.