அமெரிக்க ராணுவத்தில் மிக துல்லியமாக குறி வைக்கும் ஸ்னைப்பர், துப்பாக்கியால் சுட்டு கொலை!

அமெரிக்க ராணுவத்தில் மிக துல்லியமாக குறி வைக்கும் ஸ்னைப்பர், துப்பாக்கியால் சுட்டு கொலை!

அமெரிக்க ராணுவ சரித்திரத்திலேயே, மிக துல்லியமான ஸ்னைப்பர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ‘ஸ்னைப்பர்’ என்பவர், டெலாஸ்கோப் பொருத்தப்பட்ட துப்பாக்கியில், தொலைவில் உள்ள இலக்குகளை குறி வைத்து சுடுபவர். ராணுவத்தில், நேரடி யுத்தங்களில் ஸ்னைப்பர்களின் பணி முக்கியமானது.

சாதாரண வீரர்களால் குறிவைத்து சுட முடியாத தொலைவில் எதிர்த் தரப்பு ஆட்கள் நிற்கும்போது, இவர்கள் இங்கிருந்து குறிவைத்து சுட்டு வீழ்த்துவார்கள். அதுவும், எதிர்த்தரப்பின் தளபதிகளை சுட்டு வீழ்த்துவதுதான், பெரிய ஆபரேஷன். எதிர்த்தரப்பு ஆட்களின் நடமாட்டங்களை டெலஸ்கோப் மூலம் பார்த்துக்கொண்டு இருந்து, குறிப்பிட்ட நபர் வரும்போது, சுட்டு வீழ்த்தும் நபரே, திறமையாள ஸ்னைப்பர்.

தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ள ஸ்னைப்பர்தான், அமெரிக்க ராணுவ சரித்திரத்திலேயே, மிக துல்லியமான ஸ்னைப்பர் என்று பெயர் பெற்றவர். பெயர், கிரிஸ் கய்ல் (மேலேயுள்ள போட்டோ).

தற்போது 38 வயதான கிரிஸ், அமெரிக்கப் படைகள் ஈராக்கில் யுத்தம் புரிந்த நாட்களில், 4 அசைன்மென்ட்களில் யுத்த முனைக்கு சென்றவர். ‘அமெரிக்க ராணுவ சரித்திரத்திலேயே, மிக துல்லியமான ஸ்னைப்பர்’ என்று இவர் ஏன் சொல்லப்படுகிறார் தெரியுமா? ஈராக்கில் 4 அசைன்மென்ட்களில் இவர் மொத்தம் 160 பேரை சுட்டுக் கொன்றது, உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈராக்கில் யுத்தம் புரிந்த நாட்களில், இவரை குறிவைத்து நடத்தப்பட்ட 5 வெடிகுண்டு தாக்குதல்களில் இருந்து தப்பியிருக்கிறார். இவரது தலைக்கு அல்-காய்தா ஈராக் பிரிவு பரிசுகூட அறிவித்திருந்தது. இவரை கொல்லும் அல்-காய்தா உறுப்பினருக்கு ஏராளமான பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அது.

இதில் எல்லாம் தப்பித்துக்கொண்ட இவர், தனது சொந்த ஊரில், 25 வயது வாலிபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். என்னாச்சு?

அமெரிக்க கடற்படை சீல் டீம்-3 ல் பணிபுரிந்துவிட்டு 2009-ம் ஆண்டில் ஓய்வு பெற்றுவிட்ட இவரை சுட்டுக் கொன்றவர் (அமெரிக்க கடற்படை சீல் டீம்தான், பின்லேடனை கொன்ற ஆபரேஷனுக்கும் அனுப்பப்பட்டது) 25 வயதான எடி ரே ரௌத் என்பவர்.

கிரிஸ் கய்ல் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றபின், FITCO என்ற லாப நோக்கமற்ற சேவை அமைப்பை நடத்தி வந்தார். முன்னாள் ராணுவத்தினருக்கு ஏற்படும் மன அழுத்தங்களை போக்குவதுதான், இந்த அமைப்பின் நோக்கம். ராணுவத்தில் பணிபுரிந்தபோது, பலரது உயிர்களை கொல்ல வேண்டியிருக்கும். அந்த பாதிப்பு மனங்களில் இருப்பதால், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றபின் பலரால் சாதாரண வாழ்க்கை வாழ முடிவதில்லை.

அப்படியானவர்களுக்கு மனோதத்துவ ரீதியான பயிற்சிகளை கொடுக்கும் பணியையே, FITCO அமைப்பு மூலம் இவர் செய்துகொண்டிருந்தார்.

இவரை சுட்டுக் கொன்ற எடி ரே ரௌத் என்பவரும், முன்னாள் ராணுவ வீரர்தான். ராணுவத்தில் இருந்தபோது அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என இப்போது சொல்கிறார்கள்.

கிரிஸ் கய்ல், மற்றும் லிட்டில்ஃபீல்ட் என்ற மற்றொரு நண்பருமாக சேர்ந்து, எடி ரே ரௌத் மன அழுத்தத்தில் இருந்து மீள பயிற்சிகள் கொடுத்து வந்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற தினத்தன்று மாலை 3.15க்கு இவர்கள் மூவரும் Rough Creek துப்பாக்கி சூட்டு பயிற்சி செய்யும் வனப் பகுதிக்கு வந்துள்ளனர். மற்றொரு துப்பாக்கி பயிற்சியாளர் மாலை 5 மணிக்கு அந்தப் பகுதிக்கு சென்றபோது, கிரிஸ் கய்ல், மற்றும் லிட்டில்ஃபீல்ட் ஆகிய இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.

இதற்கிடையே இவர்களை சுட்டுக் கொன்ற எடி ரே ரௌத், தனது சகோதரி வீட்டுக்கு சென்று, தாம் இவர்களை சுட்டுக் கொன்ற விபரத்தை தெரிவிக்க, சகோதரி போலீஸூக்கு தெரிவிக்க, போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.

160 பேரை துப்பாக்கியால் கொன்றவருக்கும், துப்பாக்கியாலேயே மரணம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *