கடவுள் எனக்கு கொடுத்த இரண்டாவது வாழ்க்கை: முதன் முறையாக மலாலா பேட்டி (வீடியோ இணைப்பு)
தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய பாகிஸ்தான் மாணவி மலாலா லண்டனில் உயர்கட்ட சிகிச்சைக்கு பின்பு உடல் தேறி வருகிறார்.
பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலாவை தலிபான்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 9ம் திகதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க பிரிட்டன் அரசு முன்வந்ததையடுத்து லண்டனில் உள்ள ராணி எலிசபத் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது.
லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி உத்தரவிட்டார்.
லண்டனில் உள்ள ‘வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்’ என்ற இடத்தில் வசித்து வரும் 15 வயதான மலாலாவின் பெயர் உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
மலாலாவின் தலையில் ஏற்பட்ட காயங்களுக்காக மேலும் 2 அறுவை சிகிச்சைகள் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது.
தலிபான்களால் மலாலா கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்து முடிந்து சுமார் 5 மாதங்கள் ஆகின்றன. இதுவரை மருத்துமனையில் அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்களும் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய புகைப்படங்களும் மட்டுமே வெளியாகியுள்ளன.
இந்நிலையில், முதன் முதலாக மலாலா வீடியோ மூலம் பேசிய காட்சி நேற்று ஒளிபரப்பட்டது.
கீழ் உதட்டுடன் மேல் உதடு சரியாக பொருந்தாத நிலையில் சிரமப்பட்டு தெளிவாக பேசிய மலாலா கூறுகையில், இன்று என்னை நீங்கள் உயிருடன் பார்க்க முடிகிறது. நாளுக்கு நாள் நான் நலமடைந்து வருகிறேன்.
உங்களை எல்லாம் பார்க்க முடிகிறது என்றால், அதற்கு காரணம் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று உலகமக்கள் அனைவரும் எனக்காக செய்த பிராத்தனை தான். உங்களுடைய பிராத்தனையின் பலனாக கடவுள் எனக்கு புதிய வாழ்க்கையை தந்துள்ளார்.
இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை, இந்த வாழ்க்கையின் மூலம் நான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெண்ணும் கல்வியறவை பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இதற்காக மலாலா நிதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளேன் என்றும் கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்புக்கு பாகிஸ்தானில் இருந்து மட்டும் ரூ. 53 கோடி நிதி சேர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.











