நீர்மூழ்கி கப்பல் ரகசிய நடமாட்ட உளவு தகவல்கள் கொடுத்த ராணுவ அதிகாரி சிக்கினார்!
ராணுவ ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்ற விவகாரத்தில், தைவான் நாட்டு ராணுவத் தளபதி ஒருவர் சிக்கியுள்ளார். தைவான் ராணுவ வரலாற்றிலேயே மிக பெரிய உளவு பார்த்த விவகாரம் இது என தைவான் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். அட்மிரல் பதவி நிலையில் இருந்த இந்த ராணுவ அதிகாரி, தைவான் ராணுவ ரகசியங்களை சீனாவுக்கு விற்றார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சீனா, தமது உளவாளிகளை தைவானின் ராணுவத்துக்குள் ஊடுருவ விடுகிறது என்ற குற்றச்சாட்டு கடந்த சில மாதங்களாகவே தைவான் தரப்பால் கூறப்பட்டு வந்தது. தமது ராணுவ உயரதிகாரி ஒருவர் கைது என்ற தகவலை இன்று வெளியிட்டுள்ளார்கள்.
தைவான் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டேவிட் லோ, தமது ராணுவ உயரதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விபரத்தை உறுதிப்படுத்தினார். ஆனால், அதிகாரியின் பெயரை வெளியிட மறுத்துள்ளார்.
இதற்கிடையே தைவான் தலைநகர் தைபேயில் இருந்து வெளியாகும் ‘ஆப்பிள் டெய்லி’ பத்திரிகை, கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரியின் பெயர், அட்மிரல் சூ சங்-ஹூவா என வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டெம்பரில் தைவான் கடற்படையின் மற்றொரு உயரதிகாரி சாங் சி-சின் என்பவர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இவர் கடற்படையின் METOC (meteorology and oceanography) பிரிவில் பணிபுரிந்தவர். இந்தப் பிரிவுதான், கடற்படை கப்பல் நடமாட்டங்கள் குறித்த ரகசிய மேப்களை பாதுகாக்கும் பிரிவு.
இவர் கொடுத்த உளவுத் தகவல்களை அடுத்து, தைவான் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் நடமாட்டங்கள், பாதைகள் என்பவற்றை சீனா தெரிந்து கொண்டது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர், இதே METOC பிரிவை மேற்பார்வை பார்த்தவர் என்றே ‘ஆப்பிள் டெய்லி’ பத்திரிகை தெரிவித்துள்ளது.








