எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அதன் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட உள்ள அறிக்கை தொடர்பான உத்தேச ஆவணம் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த அறிக்கையை கொண்டு வரும் நோக்கில் இவ்வாறு உத்தேச ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான தொழில்நுட்ப சார் ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தல் மற்றும் இறுதிக் கட்ட யுத்தத்தின் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல் சம்பங்கள் போன்றன தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பத்து நாட்களுக்குள் இந்த அறிகை பகிரங்கப்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.
நவனீதம்பிள்ளையினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் தற்போது உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமை தாங்கவுள்ளார்.
நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தன் பின்னர், அமெரிக்கா இலங்கை தொடர்பான தீர்மானமொன்றை நிறைறே;ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அமெரிக்கா திருப்தி அடைந்துள்ள அதேவேளை, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் யுத்தத்தின் பின்னரான அரசியல் தீர்வுத் திட்டம் போன்ற நடவடிக்கைகளில் சிரத்தைக் காட்டத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையை தாக்கும் நோக்கில் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றவில்லை எனவும், நல்லிணக்க முனைப்புக்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.