ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை எண்ணி ஏங்கும் அவரது தாய், தனக்கு ஒவ்வொரு விடியலும் பயம் கலந்த நடுக்கத்தை அளிப்பதாக கூறியிருக்கிறார்.
தீவிரவாத தாக்குதல்களில் ஈடுப்பட்ட அஜ்மல் கசாப் மற்றும் அப்சல் குருவின் தூக்கு தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தனக்கு ஏற்கனவே இருந்த பயம் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக கூறிய அவர், ஒரு தாய்க்குதான் தனது துயரங்கள் புரியுமென உருக்கமாக தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையின் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் (66) தனது மகனுக்கு நீதி வழங்கப்படுமென நம்புவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 22 வருடங்கள் சிறையில் அடைக்கபட்டிருந்த பேரறிவாளன் சிறையில் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றிருப்பதாகவும், அவர் சிறையில் உள்ள பிற கைதிகளின் வாழ்க்கையை சீர்திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.