ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: மன்மோகன் சிங் உறுதி

சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை சந்தித்தனர்.

இதன்போது ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் ‘இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்’ என பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர்.

பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த சுதர்சன நாச்சியப்பன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது,

ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். எங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்டார்.

‘அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டில், சென்ற முறை இலங்கைக்கு எதிராக எடுத்த நிலையை தான் இந்த முறையும் மேற்கொள்வோம்’ என்று பிரதமர் உறுதி கூறினார்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிக உரிமையை பெற்றுத் தருவது, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது, பறிக்கப்பட்ட அவர்களின் சொத்துகளை உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்குவது தொடர்பான கோரிக்கைகளையும் இந்தியா வற்புறுத்தும் எனவும் பிரதமர் வாக்குறுதி அளித்தார் என சுதர்சன நாச்சியப்பன் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.