Search

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவின் 7–ம் திருநாளான நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாசி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவின் 7–ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு உருகு சட்ட சேவைக்கு பின், சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி, சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கும் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள சிவப்பு சாத்தி மண்டபத்திற்கு வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.

வீதி உலா

சிவப்பு சாத்தி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார்.

சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி இருந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

8–ம் திருநாள்

8–ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலை சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளுடை அணிந்து, வெண்ணிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமிக்கு அணிகலன்கள் அணிவது கிடையாது. காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கீழக்கோவில் சேர்கிறார்.

10–ம் திருநாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 11–ம் திருநாளான 26–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றி தெப்ப உற்சவம் வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.

பக்தர்கள் கூட்டம்

மாசி திருவிழாவின் 7–ம் திருநாளான நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) பொ.ஜெயராமன், அலுவலக கண்காணிப்பாளர் இரா.சாத்தையா மற்றம் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *