
இலங்கையில் நல்லிணக்கத்தையும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தலையும் வலியுறுத்தும் நோக்கில் இந்த உத்தேச தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச தீர்மானத்தில் திருத்தங்களை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இந்த விசாரணைகளை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத கடத்தல்கள், காணாமல் போதல்கள் கப்பம் கோரல்கள் போன்ற சம்பவங்கள் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் நீதித்துறைச் சார்ந்தோர் சிவில் சமூகத்தைச் சார்ந்தோர் அச்சுறுத்தப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.