செய்திகள்

மத்திய ஆட்சிக்கு திமுக அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டு போராட வேண்டும்: பழ.நெடுமாறன்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ஐ.நா. மனித உரிமைக் குழுவின் ஆணையர் நவநீதம்பிள்ளையே தனது அறிக்கையில் இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டிய மத்திய அரசின் நடவடிக்கைகள் நம்மை வேதனைத் தீயில் ஆழ்த்தியுள்ளன. வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஈரமில்லாத வகையில் உரையாற்றியிருக்கிறார்.

நமக்காகப் போராட வேண்டிய தளபதி எதிரிப்படையின் முன்வரிசையில் நின்று அவர்களுக்கு ஆலோச னைகளை வாரி வழங்கியிருப்பதைப் போலத்தான் அவரின் உரை அமைந்துள்ளது என தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஈழப்பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசின் போக்கினை தொடர்ந்து மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் எச்சரித்திருக்கிறார்.

முதல்-அமைச்சர் பதவியில் இருந்தபோது கூறாத வகையில் மத்திய அரசின் மீது கண்டனம் தெரிவிக்க இப்போதாவது அவர் முன் வந்துள்ளார். காலம் கடந்து மத்திய அரசுக்கெதிராக நடத்தும் மாநாடுகள், போராட்டங்கள் போன்றவை யாருக்கெதிராக என்பதுதான் மக்கள் முன்னால் உள்ள கேள்வியாகும்.

மத்திய அரசில் தி.மு.க. அமைச்சர்கள் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் மத்திய அரசுக்கெதிராக தி.மு.க. வெளியில் போராடுவது என்பது நம்பகத்தன்மைக்கு உரியது அல்ல. இந்திய அரசு உண்மையில் ஈழப் பிரச்சினைக்கு துரோகம் செய்கிறது என கருணாநிதி உணர்வது உண்மையானால் அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொண்டும் மத்திய ஆட்சிக்கு தி.மு.க. அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டும் போராட வேண்டும். இல்லையேல், அவர் நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்றாகிவிடும்’’என்று கூறியுள்ளார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *