அனைத்துலக போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்ற இந்தியா முயற்சி

அனைத்துலக போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்ற இந்தியா முயற்சி
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அனைத்துலக போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இறங்கியுள்ளதாக இந்தியாவின் டெக்கன் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை இந்தியா ஆதரிக்க வாய்ப்பில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் நடந்த கூட்டத்தொடரில், குற்றச்சாட்டுகள் குறித்த நம்பகரமான, நடுநிலையான விசாரணைகளை இந்தியா வலியுறுத்திய போதும், அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
இந்தநிலையில், அமெரிக்காவின் தீர்மான வரைபை திருத்துவது தொடர்பாக வாசிங்டனுடன் புதுடெல்லி தொடர்பு கொண்டுள்ளது.
சிறிலங்காவின் இறைமையை முற்றிலும் மதிக்கும் வகையில் தீர்மானம் அமைய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் எந்தவொரு உதவியோ அல்லது சிறப்பு அறிக்கையாளர்களின் பயணங்களோ, சிறிலங்கா அரசின் ஆலோசனை மற்றும் ஒப்புதலுடனேயே இடம்பெற வேண்டும் என்றும் இந்தியா சுட்டிக்காட்டக் கூடும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை கோரப்படுவதை தவிர்க்க விரும்பும் இந்தியா, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த சிறிலங்காவை ஒப்புக்கொள்ள வைக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக மற்றொரு இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத் தீர்மானம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக, அதனைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்காவும், இந்தியா உள்ளிட்ட அதன் ஆதரவு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் இடம்பெற்றுள்ள இந்தியப் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதுவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவர்,
“இறுதிப்படுத்தப்படும் அமெரிக்கத் தீர்மானம், மனித உரிமைகள் பேரவையில் இன்று அல்லது நாளை சமர்ப்பிக்கப்படும். புதன் அல்லது வியாழக்கிழமை அந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இறுதித் தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதனால்தான், இதுவரை இந்தியா எந்த நிலைப்பாட்டையுமை எடுக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன.
இந்தநிலையில், சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் மீது அனைத்துலக விசாரணை கோருதல் என்பதற்கு பதிலாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை சிறிலங்கா உறுதிப்படுத்த வேண்டும் என திருத்தம் செய்வது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பேச்சு நடத்தி வருவதாகத் தெரிகிறது.
இந்தியாவில் உள்ள அரசியல்கட்சிகளைத் திருப்திப்படுத்தும் வகையிலும், சிறிலங்காவுக்கு அதிருப்தி ஏற்படாத வகையிலும் அமெரிக்க தீர்மானத்தை திருத்தும் உத்தியை ஜெனிவாவில் இந்தியா செயற்படுத்தி வருவதாக தெரிகிறது.
சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா இந்தமுறை பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை.
எனினும், இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு தொடர்ந்து அரசியல் கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருவதால், அமெரிக்காவின் தீர்மானத்தை பலவீனமாக்கும் உத்தியை மத்திய அரசு தயக்கத்துடன் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.