அமெரிக்க தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை! இந்தியாவே சிங்களத்துக்கு சாதகமாக திருத்தங்கள் செய்தது!

அமெரிக்க தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை! இந்தியாவே சிங்களத்துக்கு சாதகமாக திருத்தங்கள் செய்தது!

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிங்களவர்களுக்கு சாதகமாக திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே 3 முறை திருத்தங்களுடன் வரைவு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று 4-வது முறையாக திருத்தம் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. இதுதான் இறுதி தீர்மானம் ஆகும்.

கடந்த ஆண்டு இலங்கை மந்திரி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் சந்தித்து இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதனால் இலங்கை தானாக முன்வந்து ஆணைக்குழுவை நியமித்து கற்றுக் கொண்ட பாடங்கள் என்ற பெயரில் விசாரணை நடத்தியது. ஆனால் அதன் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசு முன் வரவில்லை. அதற்கு மாறாக இலங்கையில் போருக்கு பின்னரும் தமிழர்கள் மீதான தாக்குதலும், சித்ரவதைகளும் நீடிக்கிறது.

இதையடுத்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இலங்கை கெஞ்சியதால் தீர்மானத்தின் வாசகங்களின் தாக்கம் குறைக்கப்பட்டது.

அதேபோல் இந்த முறையும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தில் 4 முறை திருத்தங்கள் செய்துள்ளது. ஒவ்வொரு முறையாக இலங்கைக்கு எதிரான வாசகங்களின் கடுமை குறைக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என கோரப்பட்டு வந்த நிலையில் அது ஏற்கப்படவில்லை. போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

குற்றம் செய்த நாடே குற்றத்தை விசாரித்தால் எப்படி இருக்கும் எனவேதான் சர்வதேச விசாரணை தேவை என கோரப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. இதேபோல் இலங்கைக்கு செல்லும் குழுக்கள் அந்நாட்டிடம் ஒப்புதல் பெற்ற பிறகே செல்ல வேண்டும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் எல்லாம் இலங்கைக்கு சாதகமானவை. இதன் மூலம் இலங்கைக்கு சாதகமாகவே அமெரிக்கா கொண்டு வந்துள்ளதாக கருதப்படுகிறது.

இதேபோல் இந்தியாவும் இலங்கைக்கு சாதகமாகவே செயல்பட்டு வந்துள்ளது. அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை கருத்து தெரிவித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த குறிப்பை நீக்க கோரும் திருத்தத்தை இந்தியா தான் கொண்டு வந்தது. அதை ஏற்று அமெரிக்கா அந்த குறிப்பையும் நீக்கி விட்டது. அதேபோல் இலங்கை செல்லும் குழுக்கள் இலங்கையிடம் ஒப்புதல் பெற்றே செல்ல வேண்டும் என்று இந்தியா திருத்தம் கொண்டு வந்தது. இந்த திருத்தத்தையும் அமெரிக்கா ஏற்றுக் கொண்டது.

ஆனால் இந்தியா தரப்பில் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தப்படவில்லை. இதுதான் தமிழர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும். ஆனால் இலங்கைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சிங்களர்களுக்கு ஆதரவாகவே இந்தியா செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவு தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளது. உப்பு சப்பில்லாத இந்த தீர்மானத்தினால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்து நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published.