தமிழர்களை கொன்று குவித்த மஹிந்தவிற்கு செங்கம்பளம்; எனது தாயார் மீது வன்முறை – லோரன்ஸ் ஆவேசம்!

தமிழர்களை கொன்று குவித்த மஹிந்தவிற்கு செங்கம்பளம்; எனது தாயார் மீது வன்முறை – லோரன்ஸ் ஆவேசம்!

இலங்கையில் தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு திருப்பதி கோவிலில் சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை செய்கிறார்கள். ஆனால் இந்தியாவை சேர்ந்த, குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகரான என்னுடைய தாயாரை கோவில் ஊழியர்கள் பிடித்து தள்ளியது தரக்குறைவான செயலாகும். என நடிகர் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.நடன இயக்குனரும், நடிகருமான லோரன்ஸ் கடந்த 31.03.2013 அன்று இரவு குடும்பத்துடன் திருப்பதி வந்தார். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

01.04.2013 அதிகாலை 6.30 மணியளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக கிரேடு–2 வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த கோவில் ஊழியர்கள் ஜருகண்டி.. ஜருகண்டி.. என்று கூறி லோரன்சின் தாயார், மனைவி மற்றும் குழந்தையை பிடித்து தள்ளி விட்டனர்.

அதை நேரில் பார்த்த லோரன்ஸ், சம்பந்தப்பட்ட ஊழியரிடம் ஆவேசத்துடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால், கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே, அங்கிருந்த சக ஊழியர்கள் ஓடி வந்து லோரன்ஸை சமரசம் செய்தனர்.

அதனையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் லோரன்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

எனது தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன்.

தாயார் பூரண குணமடைந்ததும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்துடன் திருப்பதி வந்தோம்.

சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த எனது தாயாரை கோவில் ஊழியர் ஒருவர் பிடித்து தள்ளி விட்டார். நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்து விட்டார்.

சாமி தரிசனத்தின் போது, பிடித்து தள்ளி விடுவது சரியான மரியாதை அல்ல. இது, கொடூரமான செயல். இது, எனது குடும்பத்தை அவமானப்படுத்துவது போல் உள்ளது. இதனால், ஆவேசமாக பேசி விட்டேன்.

சாமி தரிசனம் செய்ததில் திருப்தி இல்லை. பெண்களை மரியாதையாக போங்க என்று சொல்லலாம். ஏய் போ என்று கண்ட இடங்களில் கையை வைத்து தள்ளிவிடுகிறார்கள்.

திருப்பதிக்கு எப்போது வந்தாலும் ஊழியர்களின் நடவடிக்கை வேதனை அளிக்கிறது.

இலங்கையில் தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த ராஜபக்சவுக்கு திருப்பதி கோவிலில் சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை செய்கிறார்கள்.

ஆனால் இந்தியாவை சேர்ந்த, குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகரான என்னுடைய தாயாரை கோவில் ஊழியர்கள் பிடித்து தள்ளியது தரக்குறைவான செயலாகும்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.