கொழும்புக்கு சென்றுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவிடம் பிரதமர் மன்மோகன் கடிதம் ஒன்றை வழங்கியதாக தெரியவருகின்றது. அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் கடிதத்தை நாடாளுமன்ற குழு கையளித்ததாகவும் அந்த கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கொடுப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் ஊடாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது.
13ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சபைத் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்தாகவும் இந்திய செய்தியாளர்களை மேற்கோள்காட்டி கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை புதுடில்லிக்கு வருமாறு அந்த கடிதத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்தன
இதேவேளை இந்திய நாடாளுமன்ற குழுவின் பயணம் பற்றிய செய்திகள், தகவல்கள் இலங்கை அரசாங்கத்தினால் மூடிமறைக்கப்படுவதாகவும் கொழும்பில் சிங்கள ஆங்கில ஊடகங்களும் இந்திய நாடாளுமன்ற குழுவினர் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.