பிரிவினைவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சீசன் கருத்து வெளியிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பினர் தங்களை நிலைநிறுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் கைபொம்மைகளாகவே செயற்பட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோர்வேயுடனான சமாதான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்கவில்லை என கோதபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர் கூட்டமொன்றில் அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சீசன் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென சிசன் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.