வடகொரியா சமீபத்தில் இரு அணுகுண்டு சோதனைகளை நடத்தி உலக நாடுகளின் கவனத்தை திருப்பியது. மேலும் தென்கொரியா மீது போர் தொடுப்போம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்த சம்பவங்களைத் தொடர்ந்து வடகொரியா, அமெரிக்காவிடையே போர் மூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியா மீது தாக்குதல் நடத்த, முன்னாள் அமெரிக்காவின் காலனி நாடான பிலிப்பைன்ஸ் முன் வந்துள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் டெல் ரொசாரியோ கூறியதாவது:-
அமெரிக்கா அல்லது பிலிப்பைன்ஸ் மீது தாக்குதல் நடத்தப்படும் விசயத்தில், இருநாடுகளும் இணைந்து செயல்படுவது என 1951-ம் ஆண்டே பரஸ்பர ராணுவம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, கொரிய தீபகற்ப பகுதியில் போர் மூழ்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தப்படி எங்களின் மீதோ அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள எந்த ஒரு நாட்டின் மீதோ தாக்குதல் நடத்தப்படுமானால், எங்கள் ராணுவ தளங்களை பயன்படுத்தி கொள்ள அமெரிக்காவிற்கு அனுமதி அளிக்கப்படும்.
இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
தென் சீனக்கடலில், சீனா அத்துமீறி வரும் நிலையில் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தங்களை புதுப்பித்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்சின் 8000 ராணுவவீரர்கள் அங்கு போர் பயிற்சியில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








