செய்திகள்

தமிழ் மக்கள் அனுபவித்த பட்டினிச்சாவை சிங்கள மக்கள் அனுபவிக்கும் காலம் விரைவில் வரும்! தமிழ் கூட்டமைப்பு

தமிழ் மக்கள் அனுபவித்த பட்டினிச்சாவை சிங்கள மக்களும் அனுபவிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியிலிருக்கும் மகிந்த அரச தரப்பினர் வீட்டுக்குச் சென்றால்தான் நாட்டுக்கு விடிவு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான நிதி உதவிகளை அமெரிக்கா 20 சதவீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியால் முன்மொழியப்பட்ட இந்த யோசனை, இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக் காட்டியது.

ஆனால், இதை ஏற்றுக்கொள்ள மறுத்த அரசு தரப்பு, அமெரிக்காவின் நிதி குறைப்பானது இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் அது குறித்து அஞ்சத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசின் இந்தக் கருத்துத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தவை வருமாறு:

இன்று நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், இலங்கை அரசின் அசமந்தப்போக்குகளால் விரக்தியடைந்த அமெரிக்கா, இலங்கைக்கான நிதி உதவிகளை 20 சதவீதத்தால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

ஆனால், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் எதனையும் செலுத்தாது என்று மகிந்த அரசு தனது வழமையான பாணியில் கூறியுள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சத் தேவையில்லை என்றும் அரச தரப்பினர் அறிக்கைகளையும், கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், அமெரிக்காவின் நிதிக் குறைப்பு இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் நாட்டு மக்கள்தான் அவலத்தில் சிக்குவார்கள். ஆனால், மகிந்த அரசோ வெளிநாடுகளுக்கு சவால் விட்டு வீறாப்புக் காட்டுகின்றது. இந்த வீரப் பேச்சுகள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் தொடரும்?

இது இவ்வாறிருக்க, மின்சாரக் கட்டணத்தைக் கடுமையாக அதிகரித்துள்ளது அரசு. தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டு மக்களுக்கு அரசின் இந்த நடவடிக்கை இன்னும் வயிற்றிலடிக்கின்றது.

நாட்டு மக்களைப் பட்டினி போட்டு ஆட்சி நடத்த முற்படுகின்றது இந்த அரசு. எனவே, மகிந்த அரசினதும், அதன் படைகளினதும் நடவடிக்கைகளால் வன்னியில் தமிழ் மக்கள் அனுபவித்த பட்டினிச்சாவை சிங்கள மக்களும் அனுபவிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

தென்னிலங்கையில் இருக்கும் சிங்கள மக்கள், ஆட்சியிலிருக்கும் மகிந்த அரச தரப்பின் அடாவடிகளையும், சுயநலப்போக்குகளையும் இப்போதுதான் உணரத் தொடங்கியுள்ளனர்.

எனவே, இந்த அரசு வீட்டுக்குச் சென்றால்தான் நாட்டுக்கு விடிவு கிடைக்கும். மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்புவது சிங்கள மக்களின் கைகளில்தான் தங்கியுள்ளது என்றார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *