சீனக் கடற்படை நடமாட்டங்கள் அதிகரிப்பு – இந்திய கடற்படை மாநாட்டில் ஆராய்வு

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனக் கடற்படைகளின் தலையீடுகள் அதிகரித்துள்ளது குறித்து இந்தியக் கடற்படைத் தளபதிகளின் உயர்மட்ட மாநாட்டில் ஆராயப்படலாம் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனக் கடற்படையின் நீர்மூழ்கிகள், மற்றும் ஏனைய போர்க்கப்பல்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளது குறித்து, இந்தியக் கடற்படை கவலை கொண்டுள்ளது.

இந்திய கடல் எல்லைக்கு வெளியே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அண்மைக்காலத்தில் 22 தடவைகள் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டங்கள் அவதானிக்கப்பட்டதாக, அமெரிக்க முகவரமைப்பு மூலம் கிடைத்த தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையகம், இந்திய பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்திருந்தது.

இந்தியாவைச் சுற்றி, பங்களாதேசின் சிட்டகொங், மியான்மாரின் சிட்வே மற்றும் கொகோ தீவு, சிறிலங்காவின் அம்பாந்தோட்டை, பாகிஸ்தானின் குவடார் போன்ற துறைமுகங்களில் தனது தலையீட்டை உருவாக்குவதில் சீனா வெற்றி கண்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கமாக எல்லாப் பக்கங்களிலும் நிலைகொள்ளும் ஆற்றலை சீனா பெற்றுள்ளது.

இந்தியக் கடற்படைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து இந்தியக் கடற்படைத் தளபதிகளின் மாநாட்டில் முக்கியமான ஆராயப்படவுள்ளது.

இந்த மாநாடு நேற்று ஆரம்பமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *