யுத்தக் குற்றச் செயல் ஆதாரங்களை சமர்ப்பிக்கமாறு இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அது தொடர்பில் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்க முடியும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மற்றும் சனல்-4 ஊடகம் அகியவற்றின் தகவல்களின் அடிப்படையில் இராணுவ இராணுவ நீதிமன்றங்களின் ஊடாக இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சனல்-4 ஊடகத்தின் சகல குற்றச்சாட்டுக்களும் போலியானவை என்பதனை திட்டவட்டமாக அறிவிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தங்களது இருப்பிற்காக புலம்பெயர் தமிழ் சமூகம் இலங்கைப் படைவீரர்களுக்கு எதிராக பல்வேறு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழ் மக்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்பதனை வெளிப்படுத்த சில தரப்பினர் முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்காக இவ்வாறு போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது எனவும் குற்றச்சாட்டுக்கள் போலி என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் நாடு திரும்ப நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய மெய்யான நிலைமையை நேரில் பார்வையிடுமாறு புலம்பெயர் தமிழர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.