Search

தொலைபேசியில் மிரட்டினாரா குர்ஷித்? – பீரிஸ் விளக்கம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தம்மை அச்சுறுத்தும் வகையிலோ, அடக்குகின்ற வகையிலோ உரையாடவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் கல்மான் குர்ஷித் தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார்.

இதன்போது, மாகாணசபையின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான சட்டத்திருத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் சல்மான் குர்ஷித் எச்சரித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதுகுறித்து நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜி.எல்.பீரிஸ்,

“13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அரசாங்கத்துக்குள் மூன்று கருத்துகள் உள்ளன.

ஒரு தரப்பு மாகாணசபைகளை எதிர்க்கிறது. இன்னொரு தரப்பு அதனை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்கிறது. மற்றொரு தரப்பு, சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்கிறது.

அரசாங்கத்துக்குள் 13வது திருத்தம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் இருப்பது ஜனநாயகத்தின் அடையாளம்.

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் அண்மையில் நடத்திய தொலைபேசி உரையாடல் தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் கற்பனையே.

நாம் இனிமையாகவே கலந்துரையாடினோம். குர்ஷித் ஒரு அன்பான மனிதர்.

அவர் அச்சுறுத்தும் வகையிலோ, அடக்குகின்ற தொனியிலோ பேசவில்லை.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *