இலங்கையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக தீவிரமடையும் பௌத்த பேரினவாதத்தின் ஒரு கட்டமாக, தம்புள்ள புனித பூமி அமைந்துள்ள பிரதேசத்தில் வாழ்ந்து வந்த முஸ்லீம் மக்களை 24 மணித்தியாலங்களுக்குள் இருப்பிடங்களை காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்ட செயலகத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக இவ்வாறு 35 குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரச காணிகளை பலவந்தமாக பிடித்து வாழ்ந்து வந்ததாகவும் இதனால் நட்ட ஈடு வழங்க முடியாது எனவும் அரசாங்க அதிகாரிகள் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிறந்து வளர்ந்த இடங்களை விட்டு எங்கு செல்வது என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டால் வெளியேறத் தயார் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உரிய காலக் கெடுவிற்குள் வெளியேறாவிட்டால் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, முஸ்லீம் மக்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கையின் தீவிர கட்டம் தம்புள்ளையில் அமைந்திருந்த பள்ளிவாசலை இடித்ததன் ஊடாகவே சிங்கள பௌத்த பேரினவாதிகளால் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.