இரண்டு இராட்சத விமானங்களில் கொழும்பு வந்து சேர்ந்த ஆறு உலங்கு வானூர்திகள்
ரஸ்யாவில் இருந்து ஆறு எம்,ஐ -171 உலங்கு வானூர்திகள் கடந்தவாரம் சிறிலங்காவை வந்தடைந்துள்ளன.
இரண்டு இராட்சத அன்ரனோவ்-124 விமானங்களில் இந்த உலங்கு வானூர்திகள், கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
2010ம் ஆண்டில் சிறிலங்காவுக்கு ரஸ்யா வழங்கிய 350 மில்லியன் டொலர் கடனுதவியில் இருந்து, 14 உலங்குவானூர்திகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் ஆறு உலங்குவானூர்திகளே கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இரண்டு ஏ.என்-124 இராட்சத விமானங்களும் தலா 3 உலங்கு வானூர்திகளை ஏற்றி வந்தன.
இவற்றில் இரண்டு உலங்குவானூர்திகள் Mi 171-E VIP ரகத்தைச் சேர்ந்தவையாகும்.
செய்மதி தொலைத்தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட, எட்டு பயணிகள் மற்றும் விமானிகளை ஏற்றிச் செல்லும் திறன்கொண்ட இவை, சிறிலங்கா அதிபரின் பயணத்துக்கான அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபரின் பயணங்களுக்காக வாங்கப்பட்டுள்ள Mi 171-E VIP சொகுசு உலங்குவானூர்தியின் உட்புறம்
ஏனைய நான்கு உலங்கு வானூர்திகளும் Mi 171-SH ரகத்தைச் சேர்ந்தவை. இவை சிறிலங்கா விமானப்படைக்கு வழங்கப்பட்டவுள்ளன.
மேலும் எட்டு Mi-171 துருப்புக்காவி உலங்குவானூர்திகள் விரைவில் விநியோகிக்கப்படும்.
இந்த உலங்குவானூர்திகளை ஒருங்கிணைப்பதற்காக ரஸ்யாவில் இருந்து பொறியாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் கொழும்பு வந்துள்ளனர்.
இவர்கள் உலங்குவானூர்திகளை பொருத்தி, சோதனைகளை மேற்கொண்ட பின்னர் சிறிலங்கா விமானப்படையிடம் முறைப்படி ஒப்படைக்கவுள்ளனர்.