ஐ.நா.தீர்மானம்: நியாயமான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது இந்தியாவின் திருத்தம்: நாம் தமிழர் கட்சி
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்பிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய அரசு, அதன் மூலம் நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா அறிமுகம் செய்த வரைவுத் தீர்மானத்தின் மிக முக்கியமான மூன்றாவது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தது. இதனை, இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தியும், அதன் ஒப்புதலைப் பெற்றும் ஐ.நா. மனித உரிமை மன்றம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா திருத்தம் செய்துள்ளது. இது கொலைகாரனின் ஆலோசனையுடனும், ஒப்புதலுடனும் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.
இது மட்டுமின்றி, விசாரணைத் தொடர்பாகவும், அங்கு போரினால் அனைத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு செய்யப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் ஆராய வரும் ஐ.நா. குழுவினர் இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அந்நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தி, ஏற்றுக்கொள்ளச் செய்துள்ளது. இது விசாரணை சரியான திசையில் முன்னெடுக்காமல் தடுக்கும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நிகழ்ந்த படுகொலைகள் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மான் விசாரணைக் குழுவை நாட்டிற்கு அனுமதிக்க மறுத்த இலங்கை அரசை, மீண்டும் அதேபோன்றதொரு நடவடிக்கையை ஐ.நா. மனித உரிமை அமைப்பாளர்களுக்கு எதிராகவும் செய்ய தூண்டுகிற வேலையை இந்தியா செய்துள்ளது.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்