கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டியது அவசியம்!- மன்னார் ஆயர்

தமிழ் மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய ஐந்து கட்சிகளும் ஒரு கட்சியின் கீழ் வரவேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் சிவில் சமூகத்தினரினதும் விருப்பமாகும்.

இவ்வாறு ஒரு கட்சியின் கீழ் இந்த ஐந்து கட்சிகளும் வருவதன் மூலம் கட்சி வேறுபாடு என்பது ஏற்படாமல் இருப்பதுடன், ஒவ்வொரு கட்சிக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற நிலைமையும் ஏற்படாது.

தமிழ் மக்களின் நன்மைக்காகவும் தமிழரின் உரிமைக்காகவும் தமிழரின் அரசியல் ரீதியான நன்மைக்காகவும் எந்தவித பக்கச்சார்புமின்றி எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கும் ஒரு பெயரில் ஒரு சின்னத்தின் கீழ் இந்த ஐந்து கட்சிகளும் செயற்படுவதே காலத்தின் தேவையாகும். அதுவே, எங்களுடைய கனவாகும்.

இவ்விடயம் தொடர்பில் நாம் தீவிர கவனமெடுத்துள்ளோம். ஏற்கனவே நாம் இந்த ஐந்து கட்சிகளுடனும் இது தொடர்பில் பேசியிருக்கிறோம்.

ஆகவே, தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த ஐந்து கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டிய தேவை காணப்படுகிறது.

இது விடயமாக இந்த ஐந்து கட்சிகளின் தலைவர்களும் காலம் தாழ்த்தாது ஒரு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *