சிவாஜிலிங்கம் உள்ளிட்ட TELO PLOT, EPRLF உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமானம்…

அண்மையில் வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைச்சுப் பதவி தெரிவு குறித்து ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பதவிப் பிரமாண நிகழ்வுகளில் ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் முள்ளிவாய்க்காலில் ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

சத்தியப்பிரமாண நிகழ்வை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, யுத்தத்திற்குப் பின்னர் மக்கள் இராணுவத்திடம் சரணடைந்த வட்டுவாகல் மற்றும் இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டதாகவும், இறுதியில் முள்ளிவாய்க்காலி;ல் பதவிப்பிரமாணம் செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் 5 பேரும், புளொட் உறுப்பினர்கள் 2 பேரும், ரெலோ உறுப்பினர்கள் 2 பேரும் அடங்கலாக ஒன்பது உறுப்பினர்கள் நேற்றைய சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *