தன்னிச்சையான முடிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும் – இரா.துரைரெட்ணம்

தன்னிச்சையான முடிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும் – இரா.துரைரெட்ணம்

தமிழ்த் தேசியத்திற்காக செய்த தியாகங்களை வாக்குகளாகப் பெற்ற நாம் இதயசுத்தியுடனே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். தன்னிச்சையான முடிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையின் அவசியம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் நல்லாட்சி முறைமைக்கான தலைமைத்துவத்தை உருவாக்க முன்னின்று உழைப்பதை விடுத்து ஒருகட்சி சார்ந்த பக்கச்சார்பான தனி நபர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது உடன் நிறுத்தப்படல் வேண்டும். இவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சகல கட்சிகளும் பேசி தெளிவான முடிவுகளை எடுக்க இதயசுத்தியுடன் முன்வரவேண்டும்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் தமிழ் தேசியத்தின் விடுதலை என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஒன்றிணைந்துள்ளன. ஆயினும் எம்மிடையே ஒரு கட்;சிச் சர்வாதிகாரம் மேலோங்கி நிற்பதும், ஜனநாயக உரிமையும், பன்முகத்தன்மையும் பேணப்படாமையும் காரணமாக நீறுபூத்த நெருப்பாக இருந்த நீண்டகால முரண்பாடுகளும் ஜனநாயக மறுதலிப்புகளும் இக்கட்டமைப்பை வெடிப்பு நிலைக்கு இட்டுச் செல்கின்றதா என்ற ஐயம் தோன்றியுள்ளது.

வட மாகாண தேர்தல் முலம் வடக்கு மக்கள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதிகளுக்கும் அவமானங்களுக்கும், தங்கள் வாக்குப் பலத்தின் மூலம் தகுந்த பாடம் புகட்டியுள்ளதோடு தங்கள் உரிமைகள் அபிலாசைகள் தொடர்பாக அரசிற்கும், சர்வதேசத்திற்கும் மீண்டும் ஒரு முறை சனநாயக ரீதியாகத் தெளிவுபடுத்தி உள்ளனர். இவற்றிக்கெல்லாம் அப்பால் தமிழர்களது நீண்டகால ஆயுதப் போராட்டத்தினையும் அதற்கான காரணங்களையும் நியாயப்படுத்தியும் உள்ளனர்.

இவற்றின் மூலம் தமிழ்த் தேசியம் தமது போராட்ட தியாகத்தின் பெயரால் போராட்டத்திற்கு வெளியில் இருந்த பல திறமைசாலிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியும் உள்ளது.

தமிழரின் அரசியல் இருப்புக்காகப் போராடிய பல கட்சிகளைச் சேர்ந்த நாம் ஒன்று சேர்ந்து சர்வதேசத்திற்கும் சிறிலங்கா அரசிற்கும் தமிழ் தேசியத்தின் அங்கலாய்பை இத்தேர்தல் முலம் இன்று வெளிகாட்டியிருந்த போதும் எம்மிடையே இருந்த பலம், பலவீனம் காரணமாக தனிநபர்களின் ஆதிக்கம் அதிகரித்தள்ளது.

பல கட்சிகளின் கூட்டுமுயற்சியில் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டமைப்பிற்குள் ஒருகட்சியின் மேலாதிக்கப் போக்கும் ஏதேச்சை அதிகாரப் போக்கும் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளன. இந்நிலையில் உரிமைகள் தொடர்பாகவும் சலுகைகள் தொர்பாகவும் பேசுவோர் பதவிகள் தொடர்பாக தமிழர் போராட்டத்தில் தங்கள் நிலை தொடர்பாக ஒருகணம் தம்மை சுய மதிப்பீடு செய்து கொள்ளவேண்டும்.

அதேவேளை தமிழ் மக்களின் உரிகைளைப் பாதுகாப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்ததன் மூலம் சிங்கள மக்களுக்கும் சர்வ தேசத்திற்கும் ஒரு தெளிவான செய்தியை முன்னுதாரணமாக்கி உள்ளனர், நாம் எவருக்கும் எதிரானவர்கள் அல்லர் எமது உரிமைக்காகவே போராடுகின்றோம்.

இதேவேளை இதே இலங்கை அரசுதான் தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு காரணமாக இருந்ததோடு காலத்திற்கு காலம் தமிழர் தீர்வு திட்டங்களை நிராகரித்ததால் தமிழ் தலைமைகள் நம்பிக்கையீனம் கொண்டு சர்வதேசத்தின் ஆதரவை நாடவேண்டிய தேவை ஏற்பட்டது ஆனால் வடபுலத் தேர்தல் மூலம் இந்நிலை மாற்றம் உருவாவதற்கு அரசின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

ஆயினும் தமிழரின் ஐக்கியத்தையும் தமிழ்த் தேசியத்தின் உணர்வலைகளையும் தமிழர் போராட்டத்தின் இழப்புக்களையும் அவலங்களையும் அதை விட மேலான தியாகங்களையும் அர்தமற்றதாக்கி விடக்கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தற்சமயம் தலைமைகள் கூடி பேசாமல் எழுந்துள்ள உட்கட்சி தற்காலிக முரண்பாடுகளையும் சிக்கல்களையும் தனிநபர் மேற்கொள்ளும் எழுந்தமானமான முடிவுகளையும் முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு உடனடியாகக் கூடிப்பேசி தமிழ் மக்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் நல்லாட்சி முறைமைக்கான தலைமைத்துவம் ஒன்றை உருவாக்க முன்னின்று உழைப்போம்.

எமது மக்கள் தமிழ்த் தேசியத்திற்காகச் செய்த தியாகங்களை வாக்குகளாகப் பெற்ற நாம் இதய சுத்தியுடனே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இதனைக் கொச்சைப்படுத்தும் தன்னிச்சையான முடிவுகள் தமிழ் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைபில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைமைகள் ஒன்று கூடி கூட்டான ஐக்கிய அறிக்கையை வெளியிட முன்வர வேண்டும். இதற்கு மாறாக எடுக்கும் முடிவுகள் கிழக்கு மக்களின் அபிலாசைகளையும் தியாகங்களையும் குழி தோண்டிப் புதைப்பதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.