வெள்ளவத்தை – பெரேரா ஒழுங்கையிலுள்ள தொடர்மாடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த இருவர் அந்த வீட்டின் உரிமையாளரான ஓய்வுபெற்ற அதிபரை மயக்கமடையச்செய்து வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஓய்வுபெற்ற அதிபர் தனது மனைவியுடனும் மகளுடனும் இந்த வீட்டில் வசித்து வருகின்றார். இவரது மகன் இலண்டனிலிருந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்தார். இலண்டனிலிருந்து கொழும்பு வந்த மகன் தனது தாயாருடன் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். மகளும் வேலைக்குச் சென்ற நிலையில் ஓய்வுபெற்ற அதிபர் நேற்று தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் தொடர் மாடி வீட்டுக்குக் கீழ் வந்த இருவர் ஓய்வுபெற்ற அதிபரின் பெயரைச் சொல்லி அவரது வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று தொடர்மாடியின் பாதுகாவலரிடம் கேட்டுள்ளனர். ஓய்வு பெற்ற அதிபர்கள் இருவர் தொடர் மாடியில் இருக்கின்றனர் என்று பாதுகாவலர் கூறியபோது இலண்டனிலிருந்து அதிபரின் மகனும் வந்துள்ளார். அந்த வீட்டிற்கே செல்ல வேண்டுமென இருவரும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து தொடர்மாடியின் பாதுகாவலர் ஓய்வுபெற்ற அதிபரின் வீட்டுக்கு உள்ளக தொலைபேசியில் அழைப்பு எடுத்ததுடன் அவரது வீட்டுக்கு இருவர் வந்துள்ள தகவலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது மகனது நண்பர்கள் யாரோ வந்துள்ளார்கள் என்று எண்ணிய ஓய்வுபெற்ற அதிபரும் வந்த இருவரையும் வீட்டுக்குள் அனுமதிக்குமாறு பாதுகாவலரிடம் கூறியுள்ளார்.
பாதுகாவலரும் வந்த இருவரையும் தொடர்மாடியின் .மேலே செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஓய்வுபெற்ற அதிபரின் வீட்டுக்கு வந்த இருவரும் முதலில் நட்புறவாக பேசியுள்ளனர். தனது மகனின் நண்பர்கள் என்பதால் அதிபரும் ஆரம்பத்தில் நட்புறவுடன் .பேசியுள்ளார். சிறிதுநேரம் செல்ல தாங்கள் இரகசிய பொலிஸார் எனவும் மகன் குறித்து விசாரிக்கவே வந்துள்ளதாகவும் இருவரும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து கதிரையிலிருந்து எழுந்த ஒருவர் யன்னல் பக்கமாக செல்வதுபோல் சென்றுள்ளார் அப்போது அவர் கைக்குட்டையொன்றை ஓய்வுபெற்ற அதிபரின் முகத்துக்கு அருகில் கொண்டுவந்துள்ளார். இதன் பின்னர் அதிபர் மயக்கமடைந்துள்ளார். முற்பகல் 11.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நண்பகல் 12.20 மணியளவில் கண் விழித்த ஓய்வுபெற்ற அதிபர் பார்த்தபோது வீட்டின் விறாந்தையில் இருந்த மடிக்கணனி மற்றும் தனது பேர்ஸ் என்பவை காணாமல்போயுள்ளதை கண்டுள்ளார்.
வீட்டுக்குள் வந்த இருவரும் கொச்சைத் தமிழிலேயே பேசியுள்ளனர். இவர்கள் ஓய்வுபெற்ற அதிபருக்கு மயக்கத்தை ஏற்படுத்திய பின்னர் மடிக்கணனியையும் அவரது பேர்சையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வரும்போது இவர்கள் இருவரும் கைப்பை ஒன்றினைக் கொண்டே வந்துள்ளனர். அதற்குள் மடிக்கணனியையும் பேர்சையும் வைத்துக்கொண்டு இவர்கள் சென்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
பட்டப்பகலில் தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் புகுந்து வீடொன்றில் இருவர் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் வெள்ளவத்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






