Search

தென்கொரியாவில் 300 பேரின் உயிரை பறித்த கப்பல் விபத்து: கப்டனுக்கு சிறை (வீடியோ இணைப்பு)

தென்கொரியாவில் கப்பல் கவிழ்ந்து 300 பேர் பலியான வழக்கில் கப்பல் கப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் தலைநகர் சியோல் அருகில் உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 15ம் திகதி, ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு 475 பேருடன் கப்பல் ஒன்று சென்றது.

பள்ளி விடுமுறையைக் கொண்டாட சென்ற 340 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் புறப்பட்டு சென்ற இந்த கப்பல், நடுக்கடலில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி மூழ்கியது.

தென்கொரியாவை மிகவும் பாதித்த இந்த விபத்தில் 300 பேர் பலியான நிலையில், 172 பேர் மீட்கப்பட்டனர்.

இதையடுத்து கப்பலின் கப்டன் லீ ஜூன் சியோக் மற்றும் அவரது மூன்று உதவியாளர்களும் கைது செய்யப்பட்டு, கொலை, பிற குற்றங்கள் சாட்டப்பட்டு தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை தென் கொரியாவின் குவங்ஜு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

பயணிகளை விட்டுவிட்டு சென்றதற்கு கப்டன் மன்னிப்பு கேட்டதோடு, தனது நடவடிக்கையால் பல இறப்புகள் ஏற்படும் என்று தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கின் நீதிமன்ற தீர்ப்பில், கப்டன் லீ ஜூன் சியோக்கிற்கு 36 ஆண்டுகளும், கப்பலின் தலைமை பொறியாளருக்கு 30 ஆண்டுகளும், படகில் இருந்த ஊழியர்கள் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *